ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்

பதிகங்கள்

Photo

ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி
ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.

English Meaning:
Even Celestials Are His Vassals

Like the sound within the one-letter word ``Aum`` is He
He is the Great Truth the Celestials long for,
He is the Flaming Light that shines afar,
He is Our Lord,
The Immortals who adore His Feet
Are but beings to His inner service devoted.
Tamil Meaning:
``ஓம்`` என்று எழும் இசையோசையின் உள்ளீடாய் நிற்கும் எழுத்தோசையாகிய நாதம் போல, சுத்த மாயா உலகத்தில் வாழும் ஞான ஒளியினர் உயிர்க்குயிரான பரம்பொருளாக என்றும் விரும்பப்படுபவன் எங்கள் சிவபெருமான். அவனது அருள் சத்தி நிபாதர் அல்லார்க்கு ஞானம் இல்லாமையால் சேயனவாயினும் சத்திநிபாதராய் ஞானத்தைப் பெற்றவர்க்கு அவர்தம் அகத்தே விளங்குவனவாம்.
Special Remark:
``மேல் நின்ற தேவர்`` என விதந்தோதினமையால் அதற்கு இதுவே பொருளாகும். `விழுப்பொருளாகிய எம்பெருமான் அடி` என இயைக்க. ஆய்நின்ற - ஆய்வின்கண் நின்ற ஆய்வு, இங்கு ஞானம். முன்னிரண்டடிகள் இன எதுகையும் பின்னிரண்டடிகள் ஆசெதுகையும் பெற்றன.
இதனால், `ஞானியரே சிவனை இம்மையிலும் பெற்று விளங்குவர்` என்பது உடன்பாட்டிலும், எதிர்மறையிலும் வைத்துக் கூறி முடிக்கப்பட்டது.