ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்

பதிகங்கள்

Photo

ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.

English Meaning:
Lord Himself Removed ``I`` and ``He`` Distinction

As I and He, I separate sought;
And as I thus sought,
``I and He are separate are not;
—Thus the Lord of Primal Jnana Himself granted,
And then no more was the thought of I and He.
Tamil Meaning:
ஞானமாகிய உயர்நெறியில் முதற் கண்ணதாகிய ஞானத்திற் கிரியையாவது, நிலம் முதல் நாதம் ஈறாய்ச்சுட்டி அறியப் படுகின்ற அனைத்தையும் `சடம்` எனவும், அவற்றில் அவையேயாய்க் கலந்து ஒன்றி நிற்கின்ற உயிரை, `சித்து` (அறிவு) எனவும் இவ்வாறு இரண்டன் தன்மைகளும் வேறு வேறாதலை ஆராய்ச்சியால் உணர்ந்து, அங்ஙனம் உணர்கின்ற உயிர் அவை யனைத்தையும் தள்ளித் தன்னை அவற்றின் வேறாக உணர்தலாம்.அப்பால் ஞானத்தில் யோகமாவது, தான் சடத்தின் வேறாதலை யுணர்ந்தபின் மீட்டும் அவற் றின்கண் வீழ்ந்து தன்னை அவையாக மயங்காமல், உயர்நிலையில் நிற்றலாம். (உயிர் எப்பொழுதும் தனித்து நில்லாது ஆகையால் தனக்குத் தாரகமாகிய திருவருளில் நிற்றலே சடத்தில் வீழாது நன்னிலைக்கண் நிற்றலாகும் என்பது கருத்து. `நன்மை` என்றது திரு வருளையேயாம்.) இனி ஞானத்தில் ஞானமாகிய முடிநிலையாவது, நாதத்தின் துணையில்லாமலே பொருள்களை நன்குணரும் நிலையாம்.
Special Remark:
இங்குச் சரியை கிரியையுள் அடக்கப்பட்டது. `சரியையே யன்றி யோகமும் சில இடங்களில் கிரியையில் அடக்கப் -படும்` என்பது, `கிரியையென மருவும் அவையாவும் ஞானம் கிடைத் -தற்கு நிமித்தம்``8 என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறியலாம்.
``கேட்டலுடன், சிந்தித்தல், தெளிதல், நிட்டை
கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்``3
யோகம், ஞானத்தில் ஞானம்` எனப்படும். இங்கு ``மோனம்`` என்பதும் ஞானத்தோடு ஒருபொருட் சொல்லாய் வந்தது. கேட்கவும், சிந்திக்கவும், தெளியவும் படுவது குருமொழி. ``அந்தம்`` இரண்டில், முன்னது `முடிவு` என்றும், பின்னது நீங்கிய நிலை` என்றும் பொருள் தந்தன. `நான் அறிவு என்று ஓர்தல்` என மாற்றியுரைக்க. ``பின்னர் அறிவு என்று ஓர்தல்` என்றதனால், முன்னர், `நாதாந்தம் சடம் என்னும் நன்னெறி` என்பது பெறப்பட்டது. ஓர்தல் - ஆராய்தல்; சிந்தித்தல். சரியையைக் கிரியையுள் அடக்கினாராகலின், அதற்கேற்பக் கேட்டலைச் சிந்திதலுள் அடக்கி, ஓர்தலையே கூறினார்.
கேட்டல் முதலிய நான்குமே `தசகாரியம்` எனப் பத்தாக விரித்துணர்த்தப்படும். `எத்தகையோர்க்கும் நாதம் இல்லையேல் பொருளுணர்வு திட்டவட்டமாக உண்டாகாது` என்பதை `நாதம் இல்லாமலே பொருளுணர்வு திட்டவட்டமாக உண்டாகுமாயின் அதுவே முத்தி நிலையாம்` என்பதையும்,
``மூவகை அணுக்க ளுக்கும்
முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில்
விளங்கிய ஞானம் இன்றாம்;
ஓவிட விந்து ஞானம்
உதிப்பதோர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்றன்
சேவடி சேர லாமே`` -சுபக்கம் - சூ, 1.26.
என்னும் சிவஞான சித்தியால் அறிக. நன்னெறிக்கு வாயிலாதல் பற்றி கிரியையே இங்கு ``நன்னெறி`` எனப்பட்டது. `அறிதற் கருவி` என்னும் பொருளதாகிய `வேதம்` என்பது, இங்கு `அறிவு` என்றே பொருள் தந்தது.
இதனால், ஞானத்தின் படிநிலைகள் உணர்த்தப்பட்டன.