ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்

பதிகங்கள்

Photo

நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென் றிரண்டில்லை என்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

English Meaning:
Brilliance of Lord`s Light

Pearl, diamond, coral of three waters,
Gold of purest fineness and gems,
Into the brilliance of all these blended
Is the Light of Lord that in heaven is;
How else to describe that Divine Resplendence!

Tamil Meaning:
(`நான்` என்று உணர்கின்ற என்னையன்றி, எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இல்லை என்று இறுமாந்திருந்த எனக்கு, `தான் என்று ஒருவன் இருக்கின்றான்`` என்று ஞான குரு உணர்த்த, அவர் உணர்த்திய முறையில்,) `நான்` என்கின்ற எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இருத்தலை முறையான ஆய்வினால் ஆராய்ந்து உணர்ந்தேன். அங்ஙனம் அவனது இருப்பை, மட்டும் உணர்ந்த யான், எனது இயல் பிற்கு வேறாக அவன்தான் கொண்டிருக்கின்ற இயல்பு யாது` என ஆராயும் பொழுது அவன் என்னின் வேறாய் இல்லாது, என்னில் யானாகவே கலந்து நிற்றலையும், முதற்கண், `நான் அன்றித் `தான்` என்று ஒருவன் இல்லை` என யான் உணர்ந்திருந்த அந்த உணர்வையும், பின்னர், `என்னின் வேறாய், `தான்` என்று ஒருவன் இருக்கின்றான்` என்று உணர்ந்த உணர்வையும், இது பொழுது `என் இயல்பு யாது, அவன் இயல்பு யாது` என ஆராயும் ஆராய்ச்சி உணர்வையும், அந்த ஆராய்ச் சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற் கின்றான்` என உணர்ந்த உணர்வையும், அந்த ஆராய்ச்சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற்கின்றான்` என உணர்ந்த உணர்வையும் `தந்தவன் அவனே` என்னும் உணர்வையும் அவனே அருளினான். அதனஆல், நான், `நான்` என என்னை உணர்தலை அறவே ஒழித்து, அவனை மட்டுமே உணர்ந்து நிற்கின்றேன்.
Special Remark:
தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகளையே `நான்` என உணர்தல் பாச ஞானம். அஃது இங்குக் குறிக்கப்படவில்லை. பின்னர், `அவ்வுடம்புகள் அனைத்தும் சடம் ஆதலின் அவை சித்தாகிய நானல்ல` எனத் தன்னை உணரும்பொழுது, பாசத்தினும் மேம்பட்ட தனது மேம்பாடு விளங்குகின்ற நிலையில், `நானே பரம்பொருள்; எனக்கு மேலாய் ஒரு பரம்பொருள் இல்லை` என உணர்தல் பசு ஞானம். `அதுவும் அஞ்ஞானமே` எனவும், `உன்னின் வேறாய், உனக்கு மேலாய், இதற்குமுன் உனக்கு உண்டான பாச ஞானத்தையும், இப்பொழுது உண்டாகிய பசு ஞானத்தையும் உள் உணர்வினுள் உணர்வாய் இருந்து நல்கியவன் அவனே` என ஞானகுரு உணர்த்த, அதனால், பாசங் களையோ, எனது உணர்வையோ கண்ணாகக் கொள்ளாமல், அவனது உணர்வையே எனது உணர்விற்குக் கண்ணாகக் கொண்டு நோக்கிய பொழுது `நான்` என என்னை உணர்கின்ற உணர்வு தலைக்காட்டாமல், `அவன்` என்னும் உணர்வே மேலோங்கி நிற்பது பதிஞானம். அந்தப் பதிஞானத்தையே இங்கு உணர்த்தும் முக்ததால் பசுஞானம் விலகும் முறையும் உணர்த்தப்பட்டது. நாடுதல் - ஆராய்தல்.
``ஞான முதல்வன்`` என்பதில் ஞானம்,உயிரினது உணர்வு. அவ்வுணர்விற்கு முதல்வனாதலாவது, உயிரின் உணர்வு கேவலப் பட்டு மூடமாய்க் கிடந்ததனை முதற்கண் கருவி கரணங்களோடு கூடி பாச ஞானமாய் நிகழச் செய்து, பின்பு ஆராய்ச்சியால் அதனைப் பசு ஞானமாய் நிகழப் பண்ணி, முடிவில் பதி ஞானமாய் நிகழச் செய்தல். இவற்றுள் முன்னை இரண்டும் பெத்த நிலையும். பின்னது முத்தி நிலையுமாகும். பெத்த நிலையைத் திரோதான சத்தியாலும், முத்தி நிலையை அருட்சத்தியாலும், சிவன் செய்கின்றான். `நானும் நானென்று நினைத்தலை ஒழிந்தேன் என மாற்றியுரைக்க.
பாச ஞானம் உள்ளபொழுது அதற்குப் பசுவும், பதியும் புலன் ஆதல் இல்லை. பசுஞானம் உள்ளபொழுது பாசமும் பசுவும் புலன் ஆதல் இல்லை. பதிஞானம் வந்தபின் பாசமும், பசுவும் புலன் ஆதல் இல்லை. ஒவ்வொரு நிலையில் சிற்சில பொருள்கள் புலனாகாமை பற்றி, `அவைகள் அறவே இல்லை என வாதிடுதல் அறியாமையின் பாலதாம். ஆகவே, பாரமார்க்கத்தில் (உண்மை நிலையில்) பசு பாசங்கள் புலனாகாமை பற்றி, `பதி ஒன்றே உளது; ஏனைய இரண்டும் இல்லை. அவை பொய்` என்றல் உண்மையாமாறில்லை.
``வேதசாத் திரம்,மிருதி, புராணகலை ஞானம்,
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வானஎலாம் பாச ஞானம்;
நணுகி ஆன்மா இவை கீழ் நாட லாலே
காதலினால் `நான் பிரமம்` என்னும் ஞானம்
கருது பசுஞானம்``
-சுபக்கம், சூ-9,2.
என்னும் சிவஞான சித்திச் செய்யுளால் இவ்வியல்புகளையெல்லாம் தெற்றென உணர்க.
இதனால், ஞானங்களின் வகைகளை உணர்த்தும் முகத்தால், `உண்மை ஞானம் இது` என்பது உணர்த்தப்பட்டது.