ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்

பதிகங்கள்

Photo

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்(டு)அவ்
ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி
தீதில் சிவஞான யோகமே சித்தக்கும்
ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.

English Meaning:
Siva-Jnana Comes of Si Va Ya

Rid of malas denoted by ``Na`` and ``Ma``
And the primordial Anava too,
By the Grace of Siva-Sakti
Siva-Jnana pure will be;
Repeated chant Si Va Ya;
There verily is Truth of Mala-riddance.
Tamil Meaning:
மேல் எல்லாம் சொல்லப்பட்டு வந்த தூலமும், சூக்குமமும் ஆகிய ஐந்தெவுத்துக்களுள் திரோதாயியைக் குறிக்கும் நகாரமும், ஆணவத்தைக் குறஇக்கும் மகாரமும் ஆகிய இவ் இரண்டெழுத்துக்களையும் முற்ற நீக்கி, அதனாலே சிவனது `ஆதி` என்னும் சத்தி அருட் சத்தியாக மாறுவதால் முன்னர்க் குற்றம் அற்ற சிவஞானமும் பின்னர்ச் சிவயோகமும் கிடைக்கும். ஆனால் அவ்வாறு ஓதப்படும், `சிவாய` என்னும் மூன்றெழுத்தே பாசம் நீங்கிய முத்தி பஞ்சாக்கரம் ஆகும்.
Special Remark:
`இதுவே அதிசூக்கும பஞ்சாக்கரம்` என்பது குறிப்பெச்சம். ``ஆதி`` என்றது, ஆதியாய் நிற்கும் தன்மையை. `விட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அருட் சத்தியால்` என உருபு விரிக்க. சிவஞானமாவது, சிவனது அறிவு; திருவருள். `பதிஞானம்` எனப்படுவது இதுவே, பாச எழுத்துக்களை. விடாது ஓதுவதால் பாச ஞானமும், பசுஞானமும் உளவாகும். அவற்றுள்ளும் நகாரத்தை முன் வைத்து ஓதுவதால் பாச ஞானமும், சிகாரத்தை முன் வைத்து ஓதுவதால் பசு ஞானமும் உளவாம்.
பாச ஞானமாவது கருவி கரணங்களால் தரப்படும் அறிவு. சிவனையே நினைத்தும், வாழ்த்தியும், வணங்கியும் நிற்பினும் அவை யெல்லாம் கருவி கரணங்களின் வழிபட்டனவேயாகலின் பாச ஞானங் களேயாம். சரியையிலும், கிரியையிலும் இந்நிலையே உளதாகும்.
இனி யோகத்தால் கருவி கரணங்கள் அடங்க யோகி தனது அறிவாலே தான் சிவனை அறியுமிடத்து அறிவே முற்பட்டு நிற்றலால், அச்செயல் பசு ஞானத்தின் வழிப்பட்டதாம். இந்நிலையில் நிற்பவனுக்கு `எனது` என்னும் புறப்பற்று ஓரளவு நீங்கினாலும், `யான்` என்னும் அகப்பற்று நீங்குவதில்லை. திருவைந்தெழுத்தைச் சரியையாளன் நகாரம் முதலாகக் கணிப்பான்; கிரியையாளனும், யோகியும் சிகாரம் முதலாகக் கணிப்பர்.
யோகத்தால் `யான்` என்னும் அகப்பற்றும் மெலிவடைந்த பின் ஞான குருவைத் தேடியடைந்து, அவர் ஞான தீக்கை செய்து ஐந்தெழுத்தை இங்குக் கூறியவாறு மூன்றெழுத்தாக வைத்து உபதேசிக்க, பாச ஞான பசு ஞானங்கள் நீங்கிப் பதிஞானம் தோன்ற அதனால் உயிர் பதியைக் கண்டு இன்புறும். இதனையே இங்கு நாயனார் ``சிவஞானம் சித்திக்கும்`` என்றார் இதனானே பின்னர்த் தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய சிவயோகம் கூடும் ஆதலின், அதற்குத் தோற்றுவாயாகவே இங்கு ``யோகமே சிந்திக்கும்`` என்றார். இவ்யோகம் கிரியையின் பின் நிகழ்வதாகிய யோகம் அன்று. தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய யோகமாம்.
மெய்கண்ட தேவரும் இவ்வாறே சிவஞான போதத்தில எட்டாம் சூத்திரத்தில் முத்தி பஞ்சாக்கர உபதேசத்தை, ``தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த`` என்றும், ஒன்பதாம் சூத்திரத்தில் ``பாசம் ஒருவப் பதி தண்ணிழலாம்`` என்றும், ``விதி எண்ணும் அஞ்செழுத்தே`` என்றும் கூறி, ஒன்பதாம் சூத்திரவார்த்திகத்தில்,
``இனி இவ்விடத்தில் சீ பஞ்சாக்கரத்தை
விதிப்படி உச்சரிக்க``
என்றும் கூறினார். முரணிக் கூறுவனவாவன, முத்தி பஞ்சாக்கரத்தை வேறுவேறாகக் கூறுவன. திருவருட் பயனிலும்
``ஆசின் நவா நாப்பண் அடையாது அருளினால்
வாசி இடைநிற்கை வழக்கு``.*
என்றே கூறப்பட்டது. சிகாரம் முதலாக ஓதும் பொழுது ஆன்ம எழுத்தாகிய யகாரம் நகாரத்திற்கும், வகர ஆகாரத்திற்கும் இடை நிற்கின்றது. `அது வேண்டா` என விலக்கப்பட்டது. யகாரத்தை, `வா,சி` இவற்றின் இடையே நிற்க வைத்து உச்சரித்தல் வழக்கம் எனக் கூறப்பட்டது. அதனால் `சிவாயசிவ` என்பதே முத்தி பஞ்சாக்கரம் எனக் கொண்ட கொள்கையும் உள்ளது. ஆயினும் மந்திரங்களில் அது வே எழுத்தாக எண்ணப்படுதல் இல்லை. `சிவாயசிவ` என்பது பார்ப்பதற்கு ஐந்தெழுத்துப் போலத் தோன்றினஆலும், பின் வந்த `சிவ` என்பது முன்பு வந்ததே மீண்டும் வந்தது ஆகலானும் `முன்பு வந்த எழுத்துக்களின் பொருள்வேறு, பின்பு வந்த எழுத்துக்களின் பொருள் வேறு` என்றல் கூடாமையானும் அம்மந்திரம் உண்மையில் மூன்றெழுத்து மந்திரமேயாகும். ஆகையால் நகார மகாரங்கள் நீங்க நிற்கும் `சிவாய` என்னும் மூன்றெழுத்தே முத்தி பஞ்சாக்கரம் ஆகும். அதனை ஓர் உருக்கணித்து, அடுத்த உருத்தொடங்குகையலி யகாரம் வகர ஆகாரத்திற்கும், சிகாரத்திற்கும் இடைநிற்பதாக ஆகின்றது. இதனையே உமாபதிதேவர் `வா சி இடைநிற்கை` என்றார்.
வேடிக்கைக் கதை ஒன்று உண்டு. `பல சரக்குக்கடை வாணிகர் ஒருவர் தம் காலத்தையெல்லாம் வாணிகத்திலே கழித்தவர். இறக்கும் சமயத்திலும் தாம் விற்ற சரக்குக்களில் முதலில் விற்பது அரிசி என்பதையும், கடைசியில் கொடுப்படு வசம்பு என்பதையும் நினைத்து இரண்டையும் சேர்த்து `அரிசிவசம்பு அரிசிவசம்பு` என்று பலமுறை பிதற்றினார். ஆயினும் அஃது அவரது அவர், `அரி, சிவ, சம்பு` என விட்டுணு நாமத்தையும், சிவ நாமத்தையும் சொன்னதாக ஆக, அவர் முன்னே வைகுந்தம் சென்று, பின்பு சிவலோகம் சென்றார் என்பது அக்கதை.
``வால்மீகி முனிவர் முதலில் `ராம` எனச் சொல்லவாராமல் `மரா` மரத்தை நினைத்து, `மரா, மரா` என்று சொல்லிக் கொண்டிருந் -தாராம். அது ராம நாமத்தைச் சொன்னதாக ஆகிச் சிறந்த முனிவர் ஆகி விட்டார்` என்று வைணவத்தில் ஒரு கதை உண்டு. இவை போன்றது தான் முத்தி பஞ்சாக்கரத்தைக் கணிக்கும் பொழுது யகாரம் வாசி இடை நிற்றல்.
இனித் திருவைந்தெழுத்தில் சிகாரம் வேதாந்த மகா வாக்கியத்தில் `தத்` பதப் பொருளுடையதும், வகாரம் `அசி பதப்பொருளுடையதும் யகாரம் துவம், பதப்பொருளுடையதுமாதல் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. அந்நிலை உண்மையாய்ப் பயன் தருதற்குச் சிகார வகார யகாரங்கட்கு மேலும் எழுத்துக்களைக் கூட்டுதல் பொருந்தாமையும் நோக்கத்தக்கது.
`தத்துவமசி` வாக்கியத்தின் பொருள் `அது நீ ஆகிறாய்` என்பதாகலின், அவ்வாக்கியத்தில் `நீ` என்பது எழுவாயும், `ஆகிறாய்` என்பது பயனிலையும், `அது` என்பது பயனிலைக்கு அடைமொழி யுமாம் அள்ள நிலைமை எப்பொழுது மாறுவதில்லையாகலின், `முதல், இடை, கடை` என்னும் மூன்றிடங்களில் அவற்றுள் எந்தச் சொல் எந்த இடத்தில் நிற்பினும் பொருள் மாறுபடுதற்கில்லை. அதனால், முத்தி பஞ்சாக்கரத்தில் வகாரம் இடைநிற்றலால் தவறில்லை. இனி, `யகாரம் வா, சி இடை நிற்க ஓதுதலால், வா சிய்யை அருளி, யவ்வை வாழ்விக்கும் நிலை உண்டாகின்றது என்றார் உமாபதி தேவர்.*
சிவஞானபோத எட்டாம் சூத்திரத்தில் முத்தி பஞ்சாக் கரத்தைக் குரு உபதேசிக்கக் கேட்டல் மட்டுமே கூறப்பட்டமையால், அந்த அளவில் ஆன்ம தரிசனமும் சிவரூபமும் நிகழும். பின்பு ஒன்பதாம் சூத்திரத்தில் முத்தி பஞ்சாக்கரத்தைச் சிந்தித்தல் கூறப் பட்டமையால், அந்நிலையில் சிவ தரிசனம் தோன்றி ஆன்ம சுத்தி நிகழும். அது பின்பு, சிவ தரிசனத்தின்பின் நிகழ்வதாகிய சிவயோகம் தோன்றுதற்கு ஏதுவாகும்.
சிவஞான சித்தி சுபக்கம் ஒன்பதாம் சூத்திரத்தில் ``சோகம் எனப் பாவிக்க.``8 என்றது, பொருள் பற்றி ஓதியதன்றிச் சொற்பற்றி ஓதியதன்று. `சொற்பற்றி ஓதியதே` என வாதிப்போர் வாதிக்க; அதனால் நமக்கு வருவதொரு குறையில்லை. பொருள் பற்றி ஓதவே, அருணந்தி தேவரும் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தில் மெய்கண்ட தேவர் கூறிய பஞ்சாக்கரத்தைத்தான் கூறினாராதல் விளங்கும்.
``விண்ணி னார்பணிந்தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாது சிவாய என்று
எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே``*
என்று திருமுறையில் இவ்வதி சூக்கும பஞ்சாக்கரம் மிக அருமையாக எடுத்தோதியிருத்தல் அறிக.
இதனால், `அதிசூக்கும பஞ்சாக்கரமாவது இது` என்பதும், `இது முத்தி பஞ்சாக்கரம்` என்பதும் சொல்லப்பட்டன.