ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்

பதிகங்கள்

Photo

தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே.

English Meaning:
Tattva Jnanis Crush Karma

The Tattva Jnanis realize the Self;
The Gordian knot of Karma Past
They cut asunder;
Future Karmas they seize and crush,
By Grace of Siva,
Whom they hold,
High on their heads.
Tamil Meaning:
முன் மந்திரத்திற் கூறிய அந்த ஞானிகள், அம் மந்திரத்தில் கூறியபடி தாங்கள் வினையினின்று நீங்குதலோ டல்லாமல், தங்களைச் சிவமாகக் கருதி வந்து அடைந்தவர்களது வினைகளையும் சிவனது திருவருள் வியாபகத்தில் நின்று நீங்கியருள்வார்கள்.
Special Remark:
இதனை மெய்கண்டதேவர், ``தம்மையுணர்ந்து தமையுடைய தன் உணர்வார் - எம்மை யுடைமை` (சிவஞான போதம் - அவையடக்கம்) எனவும்,
``சிவன் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்துவான்`` என்றல் இத்தகைய ஞானிகளைச் சிவன் அவர் தானேயாக ஆவேசித்து வந்து அருள்புரிதலையே என்பதை, அவர்,9
``இவ்வான்மாக்களுக்குத் தமது
முதல்தானே குருவுமாய்
உணர்த்தும் என்றது,
அவன் அன்னியமின்றிச் சைதன்னிய
சொரூபியாய் நிற்றலான்``l
எனவும் அருளிச் செயதைமையால் உணர்க.
முன் மந்திரத்தில் ``வரின்`` என்றதனால், ``முன்னைவினை`` என்றது பிராரத்துவமும், இம்மந்திரத்தில், ``முடிச்சு`` என்றதனால் ``முன்னை வினை`` என்றது சஞ்சிதமும் ஆயின. வருவதற்கும், முடிச்சாய்க் கிடத்தற்கும் உரியன அவையேயாகலின், ``அவிழ்ப்பர்`` என்றது, வினைகள் பின் நின்று விளையாது உருண்டோட வீழ்த்துவர் என்றதாம். முடிச்சு - மூடை. பின்னை வினை, ஆகாமியமே. அதனைப் பிடித்துப் பிசைதலாவது, அது தோன்றும் பொழுதே மாணாக்கரது உள்ளத்தில் தம்மையும், தமது உபதேச மொழியையும் நினைவு கூர்விக்கு மாற்றால் அவற்றின் கொடுமையையும் நினைந்து அஞ்சச்செய்து முற்றாதபடி போக்குதல். ``சென்னியில் வைத்த`` என்றது, அது மேலாய் நிற்கத் தாம் அதன் கீழாய் அடங்கி நிற்றல். அதனால் அவரது செயல் சிவன் செயலேயாதல் உணர்த்தப்பட்டது, ``திருவருளாலே`` என்றதனால் சிவசமவாதம் கூடாதியிற்று.
ஞானிகளாவார் குருவருள் பெற்றவர்களே. அவர்களது `சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம்` - என்னும் மூவகை வினைகளுள் சஞ்சிதம் ஞான தீக்கையால் எரிசேர்ந்த வித்துப் போலக்கெட் டொழியும். பிராரத்தம் அனுபவத்தால் தீரும். எனினும் அஃது அவர்களது உணர்வைத் தாக்காது உடலளவாய் ஒழிதலால், ஆகாமியத்தை உண்டாக்காது. சோர்வு காரணமாக ஒரோவழி ஆகாமியம் தலை யெடுக்குமாயினும் அது உடனே அவர்களது குருலிங்க சஙகமங்களைப் பற்றிய மனமொழி மெய் வழிபாடுகளால் முறுகுதலின்றிக் கெடும். இவ்வாற்றால் ஞானிகள் தாம் வினையினின்று நீங்குதலேயன்றித் தம்மை யடைந்த பக்குவிகளுக்கு ஆசிரியராய், அவர்களது வினையையும் நீக்குவர். இஃதே இம்மந்திரத்தால் கூறப்பட்டது. இங்ஙனம் கொள்ளாக்கால், கூறியது கூறலாய், இதனாற் போந்த பொருள் ஒன்றும் இல்லையாம். ``சென்னியில் வைத்த திருவருளாலே`` எல்லாம் செய்தல் மேற்பல விடத்தும் கூறப்பட்டமையால், அதனையே கூறுதற்கு இங்கொரு மந்திரம் வேண்டா.
மூன்று வகையான வினைகளும் நீங்கும் முறை மேற்கூறிய வாறே யாதலை,
``எல்லையில் பிறவி நல்கும்
இருவினை எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும்; ஏன்ற
உடல் பழ வினைய தூட்டும்;
தொல்லையின் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத்(து)
அழல் உற அழிந்து போமே``l
என்னும் சிவப்பிரகாசத்தாலும்,
``ஏன்ற வினை உடலோடு எகும் இடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும்`` -திருக்குறள் - 98.
என்னும் திருவருட்பயனாலும் அறிக. மற்றும்,
``உணக்கி லாததோர் வித்து மேல் விளையாமல்
என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம்
நீ வந்து காட்டினாய்``
-திருவாசகம் - திருக்கழுக்குன்றப் பதிகம் - 1.
சிவமேயான ஞானிகள் பக்குவிகளுக்குச் சிவமாகவே தோன்றுவர். அதனால் அவர்களைக் கண்டவுடன் பக்குவிகள் தம்மையிழந்து அவர்பால் அடைக்கலம் புகுவர். ஞானிகளும் அவர்களது பக்குவத்தை உணர்ந்து அவர்களைத் தங்கட்கு ஆளாகக் கொண்டு, அருளுதலைச் செய்வர். இவற்றையெல்லாம் ஆசிரியர் அருணநந்தி தேவர், உமாபதி தேவர் வரலாறுகளின் வைத்து அறிக.
இதனால், ஞானிகள் தாங்கள் நலம் பெறுதலேயன்றிப் பிறரையும் நலப்படுத்துதல் கூறப்பட்டது. இந்நாயனார்,
``நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்``
எனத் தொடக்கத்திற்றானே அருளிச்செய்தது நினைக்கற்பாலது.