ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்

பதிகங்கள்

Photo

முன்னை வினைவரின் முன்உண்டு நீங்குவர்
பின்னை வினைக்(கு)அணார் பேர்ந்(து)அறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

English Meaning:
How They Deal With Karma

If Karma from past
Overtakes them,
They exterminate them,
Patiently experiencing them;
But they see,
Future Karma is created not;
They realize the Self,
They are Jnanis,
That have Tattvas cognised;
They train senses five,
In ways good.
Tamil Meaning:
தம்மை நன்குணர்ந்தபின் தலைவனையும் உள்ளவாறு அறிந்தவரே (சிவஞானபோதம் - அவையடக்கம்) உண்மைத் தத்துவஞானிகள். அவர்கள் பிராரத்த வினைதோன்றினால், `இது நாம் முகந்துகொண்டு வந்தது, இதனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்` என்று உணர்ந்து அதன் பயனாகிய இன்பத்தில் விருப்பமும், துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் கடன்கழிப்பார்போலப் பற்றற்றே ஐம்புலன்களை நுகருமாற்றால் அவ்வினையினின்றும் நீங்குவர். (பற்றுச்செய்யா மையால் அவ்வினை அவர்தம் உணர்வைத் தாக்காமல். உடலையே தாக்கி ஒழியும்) விருப்பு வெறுப்பு இன்மையால் இன்பத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், துன்பத்தை விரைவில் ஒழிக்கவும் அவர்கள் எண்ணமையால், அவர்கள் ஆகாமிய வினையில் வீழ்தல் இல்லை. அதன் தோற்றத்தை நிகழாதபடி தடுத்து விடுவார்கள்.
Special Remark:
`அதனால், உடம்பு நீங்கியபின் அவர்கள் அடைவது வீடு பேறேயன்றிப் பிறவியன்று` என்பதாம். ``தன்`` என்பதை, `தலைவன்` என்னாவிடில், ``ஞானிகள்`` என்னும் பன்மையோடு இயையாமை அறிக. ஈற்றடியை, ``முன்னை வினைவரின்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``வினைக்கு`` என்பது உருபு மயக்கம். அண்ணார் - சேரார்.
இதனால், ஞானிகள் பிறப்பை அறுத்துக்கொள்ளுமாறு கூறப்பட்டது.