ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்

பதிகங்கள்

Photo

இடன்ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன்உறும் அவ்வுறு வேறெனக் காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுறை பேதமும் ஒன்றென லாமே.

English Meaning:
jiva, Para and Siva Are One in Three Places

One person in places three functions
Yet may be as three different appear;
Like this
Are Jiva, Para and Siva;
One are they
But in different places appear.
Tamil Meaning:
உயிர் சகலாவத்தையில் தத்துவங்களோடு கூடி `சீவான்மா` எனப் பெயர் பெற்று நிற்பினும் அது தத்துவங்களின் வேறாதல்போல்வதும், நின்மலாவத்தையில் தத்துவங்களின் நீங்கி வாக்குகளின் வடிவாய் நிற்குமிடத்து `அந்தரான்மா` எனப்பெயர் பெற்று நிற்பினும் அது வாக்குகளின் வேறாதல் போல்வதும் பரா வத்தையில் பரத்தோடு கூடிப் பரான்மா எனப் பெயர் பெற்று நிற்பினும் அது பரத்தின் வேறாதல் போல்வதுந்தாம். பரம் பொருள் சீவான் மாவில் நிறைந்து `சிவம்` என நிற்பினும் அது சிவனின் வேறாதலும், பரான்மாவில் நிறைந்து `பரம்` என நிற்பினும் அது பரான்மாவின் வேறாதலும்.
Special Remark:
எனவே, `பராமான்மாவும், சீவான்மாவும் எவ்வாற் றானும் ஒன்றாதல் இல்லை` என்பதே இதனால் சொல்லப்பட்டதாம். அவத்தைகளே இங்கு `இடம்` எனப்பட்டன. ``ஒருவன்`` என்பது `புருடன்` என்னும் பொருட்டாய், உயிரைக் குறித்தது. ``உரு`` என்றது, தனக்கு வேறாய பொருள்` என்றவாறு அவற்றை உயிர், `தன்னின் வேறு` எனக் காணுதல் ஞானத்தினாலாம். ஆகவே, அந்த ஞானத்தினாற்றானே உயிர் பரத்தையும் `தன்னின் வேறு` என உணர்தல் வேண்டும் என்பதாம். அவ்வாறு உணரும் உணர்வே பதிஞானத்தைத் தரும். அவ்வாறின்றி, உயிர் தன்னையே பரமாகக் காணுதல் மல வாசனை பற்றி நிகழும் பசுஞானமாம். ``ஒன்று எனலாம்`` என்றது, `வேறாக உணரப் படுதலால் ஒரு தன்மையவாம்` என்றபடி. `திடமது போலப் பேதமும் ஒன்றெனலாம்` என இயைக்க. அது பகுதிப் பொருள் விகுதி.
இதில் உணர்த்தப்பட்ட பொருள் முன்பே சொல்லப்பட்டது.