ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்

பதிகங்கள்

Photo

சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலமள வாக்கிஅ தீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே.

English Meaning:
The Fifth State of Turiyatita

Waking within the Waking State,
And experiencing the rest of States,
The body and breath appropriate trained,
They reach the Turiyatita;
There they witness the felicitous Dance of Lord;
Drinking the fill of bliss
They Siva Become;
All these five, the Grace-fruits of Siva are.
Tamil Meaning:
`நமசிவாய` என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஏனைக் கிரியா மந்திர யோக மந்திரங்களைப் போல எண்ணாமல், உண்மையை அனுபவமாக உணர்விக்கும் ஞான மந்திரமாகக் கொண்டு) சகலசாக்கிரத்தில் (சகலஐந்தவத்தைகள் நிகழாதவாறு தடுத்து,) ஞானவத்தைகளாகிய சுத்த சாக்கிரம் முதலியனவே நிகழுமாறு, அந்தச் சாக்கிரம் முதலிய ஐந்திலும் ஐந்து வகையாகச் சுத்த மானதம் ஆகிய அறிவினாலே கணித்து, ஆதாரங்கள் ஆறும், அவற்றிற்கு மேல் ஏழாவதாகிய நிராதாரமும் உடம்பளவினவாய் நீங்க, உடம்பைக் கடந்த துவாதசாந்தமாகிய மீதானத்தில் சென்று பொருந்திய அன்பே வடிவாய் நிகழும் திருக்கூத்தை உயிர் சென்று அடைவதே, எல்லையில் இன்பத்தைச் சிவம் பெருக்கி, அதற்கு வழங்குகின்ற சிவமாம் நிலையாகும்.
Special Remark:
`நமசிவாய` என்பதை ஒரு பெயராக்குதற் பொருட்டு அதன் ஈற்றில் மகரமெய் புணர்க்கப்படுதலை, `நமச்சிவாயம்சொல்ல வல்லோம்`3 என்னும், அப்பர் திருமொழியால் உணர்க. `நமச் சிவாயம்` என்பதை `சிவாயம்` என்றது முதற்குறை `நமசிவாயம் ஐந்தும்` எனமாற்றி முதலிற் கூட்டி, `ஐந்தினையும் சாக்கிர சாக்கிரம் ஆதியில் தலை முதலாக ஆக்கி` - என உரைக்க. தலை - முதல். முதலாவது. நமசிவாய இரண்டாவது, சிவாயநம. மூன்றா வது,சிவாய, நான்காவது,சிவ. ஐந்தாவது, சி. இவையே சுத்த சாக்கிரம் முதலிய ஐந்திலும் கணிக்கும் முறை. `தூலம்` - என்றது உடம்பை `அதீதம்`, `கடந்தது` என்னும் பொருளது. இவ்வியல்பினை,
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற``
என்னும் திருவுந்தியாரால் உணர்க. `ஆதார நிராதாரயோகங்கள் பாவனை மாத்திரமே` என்பதை அந்நூல்.
``ஆக்கில் அங் கேஉண்டாய், அல்லதங் கில்லையாய்ப்
பார்க்கில் பரமதன் றுந்தீபற;
பாவனைக் கெய்தாதென் றுந்தீபற``
எனக் கூறிற்று.l இந்தப் பாவனாயோகங்கள் ஆன்மாத் தன் முனைப்பு அறுதற்குரிய சாதகங்களாம். அச்சாதகங்களால் அம்முனைப்பு அற்றால், ஆன்மா `யான்` என்றும், `எனது` என்றும் எழுந்து உலகத்தில் சென்றும் பற்றும் நிலை ஒழியும். அஃதொழிந்த பொழுது, மீதானத்தில் இறைவனது திருக்கூத்தின், சிலம்பொலி கேட்கும்` அது கேட்டவுடன் ஆன்மா இல்லார்க்குக் கிழியீடு நேர் பட்டாற் போலப் பேரார்வத்துடன் ஓடி அவனையே அடைந்து அவன் மீதே அன்பு செலுத்தி அவனது இன்பத்தில் அழுந்தியிருக்கும். அதனைத் திருக்களிற்றுப்படியார்,
``ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசை வழியேசென் றொத்தொடுங்கி - ஓசையின்
அந்தத்தா னத்தான் அரிவையுடன் அம்பலத்தில்
வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து``.3
என விளக்கிற்று.
இவ்வெண்பாவில் கூறப்பட்ட அந்த நிலையே இங்கு அதீதம் எனப்பட்டது.
``எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்``.
(தொல், பொருள் - பொருளியல்.) எனத் தொல்காப்பியரும், அவ்வாறே,
``இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல் இன்றுண்டாம்;
அன்பு நிலையே அது,`` * *திருவருட்பயன் - 80.
என உமாபதி தேவரும் கூறியவாறு. அன்பே இன்பத்திற்குக் காரணம் ஆதலின், ஆனந்த தாண்டவத்தை உயிரினது அன்பான தாண்டவம் என்றும், அந்நிலையில் அந்த ஆனந்தத்தை வழங்குகிற சிவத்தை. (இன்ப வெள்ளத்தைத்) தேக்கும் சிவம் என்றும் கூறினார். அன்பே சிவம். (முதல் தந்திரம் - அன்புடமை) என்றதும் இங்குக் கூறிய அன்பையே என்பதையும் இதனானே உணர்க.
அன்பு நிலையே ஆனந்த நிலையாம் அன்றி வெறும், அறிவு நிலை ஆனந்த நிலை ஆகாமையை இங்கு உணர்ந்துகொள்க.
இதனால், `அத்துவாக்களைக் கடக்குமாறும்` கடந்தவழி உளதாகும் பயனும் கூறப்பட்டன.