ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்

பதிகங்கள்

Photo

நாடிய மண்டலம் மூன்றும் நலம்தெரிந்(து)
ஓடும் அவரோ(டு) உள்இருபத் தைந்தும்
கூடினர் கூடிக் குறிவழி யேசென்று
தேடினர் தேடித் திகைத்திருந் தார்களே.

English Meaning:
Ascend Beyond the Three Spheres

The three Spheres within (Sun, Moon, and Fire)
They ascend and traverse, (in yogic way)
Having traversed,
They with Tattvas five and twenty
In one unite;
Further coursing the breath
Upward through Sushumna
They search;
And having sought,
Self-Consciousness lost,
They there remain.
Tamil Meaning:
(அத்துவாக்களைத் தரிசிக்க, அஃதாவது உள்ளபடி நேரிலே காண விரும்பியவர்கள் பிராசாத நெறியில் நின்று) உடம்பிலே கீழிருந்து பாவிக்கப்படுகின்ற நெருப்பு மண்டலம், நீர் மண்டலம், நிலா மண்டலம் - என்னும் மூன்று மண்டலங்களை உள்ளே உணர்ந்து இடை கலை, பிங்கலை வழியாக ஓடுகின்ற அந்தத் துணைவரோடு தாமும் ஓடித் தூல சூக்கும தத்துவங்களாகிய இருபத்தைந்து தத்துவங்களைக் கண்டார்கள். அதன் பின்பு அந்தத் துணைவரால் ஆகாமையின், குரு காட்டிய அந்தக் குறியான வழியிலே சென்று பர தத்துவங்களைத் தேடினர். அவ்வாறு தேடியும் அவை தரிசனப்படாமையால், ஒன்றும் தோன்றாது திகைத்து நின்றுவிட்டார்கள்.
Special Remark:
`ஓடும் அவர்` - என்றது உருவகம். ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு, புருட தத்துவம் ஒன்று இவை இருபத்தைந்து தத்துவம். வித்தியா தத்துவங்கள் `புருடன்` என ஒன்றாய் அடக்கப் பட்டன. ஆன்ம தத்துவம் தூலமும், வித்தியா தத்துவம் சூக்குமமும் ஆகும். சிவ தத்துவம் பரம். அஃதாவது அதிசூக்குமம். தூல சூக்கும தத்துவங்கள் சகலர் பிரளயாகலர் கட்குச் சரீரமாய் அமைதலால், அவை யோகக் காட்சியில் காணப் படுவவாயின. `உள் இருபத்தைந்து` - என்றதும் இதுபற்றி, சிவ தத்துவம் அவ்வான்ம வருக்கத்தினருக்கு வேறாய் நிற்றலின், அவை அங்ஙனம் காணப்படாவாயின.
சிவ தத்துவங்களையும் அனுபவமாக உணர்ந்த பின்பே ஆன்மாச் சிவத்தை அடைய இயலும். தத்துவம் முப்பத்தாறும் நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் அடங்கியுள்ளன. ஏனை நான்கு அத்துவாக்களும் தத்துவத்தில் அடங்கிவிடும். ஆகவே, தத்துவங் களைக் கண்டுவிட்டால், கலைகளைக் காண்டலும் எளிதில் கூட, அத்துவாக்கள் அனைத்தும் காணப்பட்டனவாய்விடும்.
இதனால், அத்துவாக்களில் சில பகுதிகளைக் காணுமாறும் கூறப்பட்டது.