ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்

பதிகங்கள்

Photo

தத்துவம் ஆறாறு தன்மனு ஆறைந்து
மெய்த்தகு வன்னம்ஐம் மானொன்று மேதினி
ஒத்திரு நூற்றிரு பான்நான்(கு) எண்பானொன்று
வைத்த பதம்கலை ஓரைந்தும் வந்தவே.

English Meaning:
The Six Higher Steps

Six times six are the Tattvas;
Seven Crores are the Mantras;
Fifty and one are the Varnas (letter-sounds);
Two hundred and twenty four are the Bhuvanas; global constellations;
Eighty and one are the Padas Primal,
Five, the Kalas rare.
Tamil Meaning:
ஆறத்துவாக்களில், `தத்துவம் முப்பத்தாறு` என்பது முன்பே குறித்து, விளக்கம் தரப்பட்டது. (எனவே, அஃது இங்கு நினை வூட்டும் அளவே கூறப்பட்டதாம்.)
Special Remark:
சொல்லுலகத்தில் முதலாவதாகிய மந்திரம் பதினொன்று, அவை `ஈாசனம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தி யோசாதம் என்னும் பிரம மந்திரம் ஐந்தும், `இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அத்திரம்` - என்னும் அங்க மந்திரம் ஆறுமாம். தன் என்றது உயிரை.
இவற்றை ஏற்க விரும்பாதவர்கள், `ஏழ்கோடி` எனப் பாடத்தைத் திருத்தினர். கோடி` என்பது ஏனையவைபோல எண்ணுப் பெயர் ஆகாமையை நோக்குக.
செய்யுள் நோக்கி - `எண்பான் ஒன்று வைத்த பதம்` என்பது பின் கூறப்பட்டது.
பதங்கள் எண்பத்தொன்று. `அவை யிவை` என்பதைச் சிவநெறிப் பிரகாசச் செய்யுள் - 179,80,81 - இன் உரையிற் காண்க. இங்கு எடுத்துக் கூறின் விரியும்.
வன்னம் ஐம்பத்தொன்று. வன்னம் - எழுத்து. அவைகளை வடமொழி பற்றி யறிக. இவற்றுள் ஒன்று நீக்கி, ஐம்பது என்றலும் வழக்கு என்பதனை, ``ஐம்ப தெழுத்தே அனைத்து வேதங்களும்`` என்னும் மந்திரத்தான் அறிக.
மேதினி - புவனம். புவனம் இருநூற்றிருபத்து நான்கு. தத்துவங்கள் தோறும் புவனங்கள் உள்ளன. அவற்றின் எண் ணிக்கையைச் சிவஞான மாபாடியம் இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்தில் காண்க.
கலை ஐந்து. `அவை நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` - என்பன. வந்த - ஆன்மாவிற்கு வழியாகக் கிடைத்தன.
இந்த அத்துவாக்கள் ஆறிலும் உயிர் வியாபித்திருத்தலால், அது செய்த வினைகள் சஞ்சிதமாய், இவ்வத்துவாக்களைப் பற்றிக் கிடக்கும். அவை உள்ள வரையில் உயிருக்கு உண்மை ஞானம் விளங்கமாட்டாது. அதனால் பக்குவம் எய்திய உயிர்கட்குச் சிவன் குருவாகி வந்து, `அத்துவ சுத்தி` அல்லது `கலா சோதனை` - எனப்படும் நிருவாணதீக்கையில் ஞானவதியாகவாவது, கிரியாவதி யாகவாவது செய்யும் ஆகுதிகளால் சஞ்சிதத்தைத் துடைத்து, உபதேசத்தைச் செய்தருளுவான். அங்ஙனம் அவன் செய்த உபதேச மொழியை உயிர் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து பின் நிட்டை எய்தும்.
ஞானவதியாவது குண்டம், மண்டலம், வேதிகை முதலிய எல்லாவற்றையும் குரு தமது அகத்திலே கற்பித்துக் கொண்டு செய்வது. கிரியாவதியாவது, அவைகளை வெளியில் யாவரும் காண அமைத்துச் செய்வது.
இதனால், அத்துவாக்களின் தொகைகள் கூறப்பட்டன.