ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்

பதிகங்கள்

Photo

இலையாம் இடையில் எழுகின்ற காமம்
உலைவாய நேசத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் னிடைக்கே.

English Meaning:
The Pure Will Reach God

The heart that lusts after
Slender-waisted damsels
Will in distress immersed be;
They, with hearts pure,
Body shimmering as lightning
And Will made of iron
Are for Siva`s presence destined.
Tamil Meaning:
மாதரது நுண்ணிய இடையின்மேல் எழுகின்ற காம உணர்ச்சி மக்கள் உள்ளங்களில் உலையிடத்தில் உள்ள நெருப்புப் போல மிகுகின்ற ஆசையாலே பெருகி மிகும். ஆயினும் அந்த ஆசையால் சிறிதும் கலங்காது கல்போல உறுதியுற்று நிற்கும் உள்ளம் உடையவர்கள், சிவனது திருமுன்பில் காமம், குரோதம் முதலிய குற்றங்களோடு கூடாது மேன்மையுற்று விளங்குகின்ற ஒளி உடம்பைப் பெற்று வாழ்வார்கள்.
Special Remark:
இலையாம் இடை - `இல்லை` என்றே சொல்லத்தகும் முறையில் அமைந்த இடை. `இடை` என்றது இடக்கர் அடக்கல். உலை வாய - கொல்லனது உலையின்கண் உள்ளவை; நெருப்பு இடம் பற்றிப் பன்மையாகக் கூறப்பட்டது. `உலைவாயன போலும் நேசம்` என அஃது உவமத் தொகையாய் வந்தது. `மூழ்குவிக்கும்` என்பதில் பிற வினை விகுதி தொகுத்தலாயிற்று. அதற்கு `அவற்றை` என்னும் செயப் படு பொருள் வருவிக்க. `உளத்து` என்பதனை முதலிற் கூட்டியுரைக்க. `மின்னுடல்` என்றது, `ஒளியுடம்பு` என்றபடி. `திவ்விய சரீரம்` என்பர். சித்தத்தை உடையவரது செயலை, `சித்தம் திருமுன்னிடக்கே தாங்கித் திரியும்` எனச் சித்தத்தின் செயலாக உபசரித்துக் கூறினார். முன்னிடை - முன்னிடம். குவ்வுருபைக் கண்ணுருபாகத் திரித்துக் கொள்க. சிவலோகத்தையே, `சிவ முன்னிடை` என்றார். `சிவ முன்னிலைக்கே` எனப்பாடம் ஓதுதலுமாம்.
இதனால், `நிலையில்லாத உடம்பினாலே சிவ புண்ணியங்களைச் செய்து நிலையுடைய வீட்டைப் பெறுதல் தக்கது` என்பது, அவ்வாறு செய்யாதாரது செயலையும், செய்தாரது செயலையும் ஒப்பிட்டுக் கூறுமுகத்தால் உணர்த்தி முடிக்கப்பட்டது.