ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 28. புருடன்

பதிகங்கள்

Photo

வைகரி யாதியும் மாய்ஆ மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்தால்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.

English Meaning:
Lord Creates Activating Saktis, Jnana and Kriya

Vaikhari and rest of Sounds,
Mays and rest of Impurities,
Purusha and rest of Tattvas illusory
—All these,
Acting on Saktis, Jnana and Kriya,
The Lord True from time immemorial made.
Tamil Meaning:
தோன்றியழிகின்ற வைகரி முதலிய வாக்குக்களாகிய சொல்லுலகங்களையும். மற்றும் பொருளுலகங்களையும், அவைகளைப் பற்றி நின்று `புருடன், உருத்திரன், சிவன்` என உயிர்கள் அடையும் நிலையற்ற வேறுபாடுகளையும் தனது உண்மைத் துணையாகிய ஞானம், கிரியை என்னும் வேறுபாடுகளையுடைய தனது சத்தியால் செய்கின்ற நிலையான முதல்வன் சிவபெருமானே. இவ்வமைப்பு அனாதியே அமைந்த அமைப்பாகும்.
Special Remark:
`மாய், ஆ` என்னும் முதனிலைகள் அடுக்கி, `மலம்` என்னும் பெயரோடு வினைத்தொகையாய்த் தொக்கன. அந்நிலைமை தாப்பிசைவாய், முன்னர் ``வைகரியாதி`` என்பதனோடும் இயையும். மாய்ந்து ஆகின்ற மலங்களாவன மாயேயங்கள். ``ஆதி`` என்றதனால் கன்மமும் தழுவப்பட்டது. கருவியின்றிக் கன்மம் நிகழாது ஆகையால் அக்கருவியைப் படைத்துக் கொடுத்தல் பற்றி, `கன்மத்தைச் செய்பவனும் சிவனே` எனக் கூறினார்.
உயிர் முப்பத்தாறு தத்துவங்களையும் பற்றி நிற்கும்பொழுது `புருடன்` என்னும் நிலையையும், ஆன்ம தத்துவத்தை ஒழித்து, ஏனைப் பன்னிரண்டு தத்துவத்தளவில் நிற்குமிடத்து `உருத்திரன்` என்னும் நிலையையும், அவற்றுள்ளும் வித்தியா தத்துவங்களை ஒழித்து, ஏனைச் சிவ தத்துவத்தளவில் பற்றி நிற்கும் பொவுது `சிவன்` என்னும் நிலையையும் அடையும். இவ்வாற்றானே `மூவுலகம்` என்பன சிவநெறியில் புருடலோகம், உருத்திர லோகம், சிவலோகம்` என்பனவே யாகின்றன. அட்ட வித்தியேசுரர், சுத்த கோடி மகா மந்திரேசுரர். அணு சதாசிவர் என்போர் யாவரும் `சிவர்` என்னும் வகையினரேயாவர்.
கரி - சான்று; இங்கு வினை முதலாந் தன்மையைக் குறித்தது. பொய் கரி - பொய்க்கும் கரி, மெய்கரி - மெய்க்கும் கரி, `பொய், மெய்` என்பன நிலையாமை, நிலைத்தல் இவற்றைக் குறித்தன. நடுவண் நின்ற ``கரி`` என்பது கருவியை வினைமுதல் போலக் கூறியது. விசேடம் - சிறப்பியல்பு. சிவனது சிறப்பியல்பு அவனது சத்தி. இங்கு அமைப்பாவது செய்வோனும், செய்யப்படுவனவுமாய் நின்ற இயல்பு `செய்தது` என்பது, `செய்யப்பட்டது` என்னும் பொருட்டாய்ச் செய்யாததைச் செய்ததுபோலக் கூறும் இலக்கணை வழக்காய் நின்றது.
இதனால், உயிர், `தான் புருடனாய் நிற்றல் முதலிய நிலைமை களும் சிவனால் ஆவன்` என்பதை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.