ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்

பதிகங்கள்

Photo

மயலற் றிருளற்று மாமனம் அற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத்
தயலற் றவரோடுந் தாமேதா மாகிச்
செயலற் றிருப்பர் சிவவேடத் தாரே.

English Meaning:
They of Siva-Robe are action-less

Sans illusions, sans ignorance, sans intelligence,
Sans the embraces of fish-eyed damsels and their attachment,
Themselves as themselves; in solitude remain one in Siva-Sakti;
Thus are they, the Holy ones in Siva`s robe.
Tamil Meaning:
யாதும் அறியாமையும், மயங்கி யறிதலும் ஆகிய இரண்டும் நீங்கி, அதனானே புலன்மேற் செல்லும் மனம் அடங்கி, அவ் அடக்கத்தானே மகளிர் ஆசை முதலிய ஆசைகளும் அற்று, தமக்கு முன்னே அங்ஙனம் அற்று நின்றாரை அடைந்து `அவர், தாம்` என்னும் வேற்றுமை யின்றி அவரே தாமாய் ஒன்றியியங்கித் தம் செயல் அற்றிருப்பர் உண்மைச் சிவவேடத்தார்.
Special Remark:
முன்னிற்கற்பாலதாகிய ``இருள்``, செய்யுள் நோக்கிப் பின்னின்றது. `கண்ணியரோடு` என உருபு விரிக்க. கை, இடைச் சொல். இணக்கு - இணங்குதல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். தையல், `தயல்` எனப் போலியாயிற்று. `தையலற்றவர்` என்றது, `மேற்கூறிய நிலையை யெல்லாம் அடைந்தவர்` என்றவாறு. ``தாம்`` இரண்டில் முன்னது, `அவர்` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், அரனுக் கடிமையாதல் முதலியவற்றால் உண்மைச் சிவவேடத்தராயினாரது இயல்பு கூறும் முகத்தால், அவ்வேடத்தின் பயன் கூறப்பட்டது.