ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்

பதிகங்கள்

Photo

உடலில் துவக்குவே டம்முயிர்க் காகா
உடல்கழன்றால் வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மை என் றோர்ந்துகொள் ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே.

English Meaning:
The robe is not for Soul

The robe is for the body; not for the Soul
When the body falls, the garb with it falls;
Those that know not that the Soul within the body is real,
Are tossed about like a log caught in wavy sea.
Tamil Meaning:
உடம்பில் பொருத்தப்பட்ட வேடங்கள் உயிர்க்கு உரியன ஆகமாட்டா. அதனால், உடம்பு நீங்கினால் வேடமும் அத னோடே நீங்கிப் போதலன்றி உயிரோடு உடன் செல்லுதல் இல்லை. `உடம்பு, உயிர் சிறிது காலம் தங்கியிருக்கும் ஓர் இடமே` என்னும் உண்மையை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர் கடலில் அகப்பட்ட மரத்துண்டு அதன் அலைகள் பலவற்றாலும் அலைக்கப்படுதல் போலப் பிறவியிற் பட்டு பல்வேறு உடம்புகளால் அலைக்கப்படுவர்.
Special Remark:
``உண்மை``, `உளதாதல்` எனத் தொழிலாய் நின்று அதற்குரிய இடத்தைக் குறித்தது.l ``உடம்பில் - துச்சில் இருந்த உயிர்க்கு`` என்ற வாறு, சிறிது காலம் இருத்தலையே இங்கு, ``உண்மை`` என்றார். ``கடலில் அகப்பட்ட கட்டை`` என்பது சுட்டிக் கூறா உவமம் ஆதலின், அஃது இங்ஙனம் விரிக்கப்பட்டது. இது, `வேடம் மாத்திரமே உயிர் உய்தற்கு வழியாம்` என மயங்கி, ஞானத்தைப் பெறும் வேட்கை இன்றி இருப்போரை நோக்கிக் கூறியது. எனவே, மேற்கூறியவாறு அரசனுக்கு அடிமையாதல் முதலியன உளவாய வழியே வேடம் சிவவேடமாதலைத் தெளிவித்தவாறாயிற்று.
இதனால், உடல் உயிர்த் தன்மைகளை இனிதுணர்த்து மாற்றால், மேலது வலியுறுத்தப்பட்டது.