ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 10. திருநீறு

பதிகங்கள்

Photo

அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியன்உரு மாறி
நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத
ருருவம் பிரம உயர்குல மாமே.

English Meaning:
Holy Ashes elevate to Brahma Status

The holy ash shall make you a king
And all regalia shall you have;
They that are in its fire purified
Shall in truth be transformed divine;
Reaching the Feet of the Eternal, the Immaculate
They shall attain Brahman`s form
And ever be of Order Divine.
Tamil Meaning:
பசுவின் சாணம் அரசு முதலிய சமித்துக்கள் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முன்னைப் பருவுரு மாறி அமைந்த அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாம்.
Special Remark:
ஆலத்தி - ஆப்பி.
``மறைக்குங் காலை மரீஇய தொரால்` *
என்பதனான் இஃது அவையல்கிளவி யாகாதாயிற்று. அன்றியும் ஒலி வகையால் `ஆல் அத்தி` என்பது போலத் தோன்ற வைத்தமையானும் அன்னதாகாதாயிற்று. `ஆல் அத்தி` என்றே பொருள் உரைப்பினும் திருநீற்றுக்கு முதலாகிய பசுச்சாணம் பெறப்படாமை அறிக. ``அரசு`` என்றது பிற சமித்துக்களுக்கு உபலக்கணம். `ஆலத்தி அரசுடன் விரிவு கனலில் வியன் உருமாறி ஆகும் அக் காரம்` எனக் கூட்டுக. திருநீற்றின் வேறு பெயர்களும் ஒன்றாகிய `க்ஷாரம்` என்னும் ஆரியச் சொல், ``காரம்`` எனத் தற்பவமாய் அகரச் சுட்டேற்று. ``அக்காரம்` என வந்தது. ``அக்காரம் நிரவிய`` எனச் சுட்டிக், கூறவே, திருநீற்றை, `சாம்பல், சுடலைப் பொடி` முதலாகப் பொதுவில் பலவகையாகக் கூறினும் `தக்க பசுவின் சாணத்தைத் தக்க வகையில் பெற்று மந்திரத்தால் கோசலங்கொண்டு பிசைந்து உலர்த்திச் சிவவேள்வியில் இட்டுப் பெற்றதே உண்மைத் திருநீறாம்` என்பதனை முதல் இரண்டடி களாற்கூறினார். நிரவுதல் - நிரம்பப்பூசுதல். `பிறப்பால் அந்தண ராதலே பிரமகுலமாகாது; திருநீற்றை நிரம்ப அணிந்தவழியே ஆகும்`` என்றற்கு `சிவனுருவாம்` என்னாது ``பிரம உயர்குலமாம்`` என்றார்.
இதனால், `திருநீற்றை இல்லாதவர் கடவுளை உணரமாட்டார்` என்பது கூறப்பட்டது.