ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்

பதிகங்கள்

Photo

ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே. 

English Meaning:
Chandra Yoga in Kundalini Yoga

Twelve the female Kalas (of Sun)
Sixteen the male Kalas (of Moon)
Seize them both sitting unmoved,
And consign them to the Kundalini Fire,
In that yoga wells up the ecstasy beyond recount.
Tamil Meaning:
``பன்னிரண்டு`` என வரையறுக்கப்பட்ட சூரிய கலைகள் பெண் கலைகள். ``பதினாறு`` என வரையறுக்கப்பட்ட சந்திர கலைகள் ஆண் கலைகள். இவைகளை இந்த அளவுகளில் குறையாமல் பூரித்து, மூலாக்கினி விளங்கும் இடமாகிய சுவாதிட்டானத்தில் கும்பித்தால், அவ்விடத்துத் தெவிட்டாது தோன்றுகின்ற இன்பம் பேரின்பமே.
Special Remark:
சூரிய சந்திரர்களை முறையே ஆண்மையும், பெண்மையும் உடையவராகக் கூறுதல் மரபாயிருக்க, இங்குச் சூரிய கலை சந்திர கலைகளை மாறிக் கூறியது என்னை யெனின், சந்திர கலையே சந்திர மண்டல ஆற்றலை மிகுவித்தல் பற்றி என்க. இது பற்றியே யோகத்தில் சந்திர கலையை முன்னர் வைத்துக் கூறுதல் பெரு வழக்காயிற்று. ``பன்னிரண்டு, பதினாறு`` என்பவைகளை எடுத்தோதி யதனால், முன்னை மந்திரத்தில் ``கூட`` என்றது, `இந்த அளவில் குறையாது கூடியபின்` என்பது பெறப்பட்டது.
`ஒரு கலை` எனப்படுவது, ஒரு முறை பூரித்துக் கும்பித்து, இரேசித்தலாம், என்பது மேலேயும் (பா. 835) கூறப்பட்டது. `பூரக, கும்பகம்` என்னும் முறையில் நிகழும். இரேசகங்களுக்கு மேல் (பா.556) சொல்லப்பட்ட மாத்திரை அளவுகள் சந்திர கலைக்கு உரியன. பதினாறு கலைகளையுடைய சந்திர கலைக்கு மாத்திரை அளவு சொல்லப்பட்டதனானே, பன்னிரண்டும் பத்தும் நான்கும் ஆகிய கலைகளை உடைய சூரியகலை அக்கினி கலை நட்சத்திர கலைகட் குரிய மாத்திரை அளவுகள் கணக்கிட்டுக் கொள்ளப்படும் என்க. அக்கினி கலைக்குப் பூரித்தலாவது சுவாதிட்டானத்தில் கும்பிக்கப் பட்ட வாயுவை மணி பூரகம் முதலிய ஆதாரங்களில் செல்ல மேற் செலுத்தல். கும்பித்தலாவது, ஆஞ்ஞை முதலிய மேல் இடங்களில் அவ்வாயுவை நிறுத்துதல். இரேசகமாவது அவ்விடங்களிற் சென்ற வாயுவை இரு மூக்கு வழியாகவும் வெளிச் செலுத்துதல்.
`பேராமல் பெய்யில்` என இயையும். புக்கு - முயன்று. மூலாதாரத்தில் உள்ளது காரண நிலையில் நிற்றலால், அஃது எழுந்து செல்லும் நிலையை, ``நேராகத் தோன்றும் நெருப்பு`` என்றார். இங்கு, `நெருப்பு` என்றது அஃது அடையும் இடத்தைக்குறித்தது. கும்பித்த பின் சந்திர மண்டலத்தில் உளதாம் இன்பத்தை, கும்பித்ததனானே உளதாகக் கூறினார். இஃது உடற்கண்ணே தோன்றுவதாயினும் வீட்டின்பமே என்றற்கு, ``ஆனந்தம் ஆனந்தம் ஆனதே`` என்றார். ஆணும், பெண்ணும் கூடியவழி இன்ப நுகர்ச்சியும், அவ்விருவரும் ஒருங்கே தீப்புக்கவழித் துறக்க இன்பமும் உளவாம் என வேறு பொருளும் இதன்கண் தோன்றிற்று.
இதனால், ``அங்கி கதிர் கூட, அங்கி மதி கூட`` என்றவற்றின் அளவுபற்றி ஐயம் அறுக்கப்பட்டது.