ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்

பதிகங்கள்

Photo

எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே. 

English Meaning:
When Breath Turns Subtle

When Prana ascends to Moon`s Kala
It turns subtle (Sukshma)
The two breaths through Ida and Pingala run gross;
They rise and fall unto the kalas that wax and wane;
Pure is that Sukshma (Subtle)
Gross is that runs in the body.
Tamil Meaning:
சந்திரனிடத்துப் பொருந்தியுள்ள கலைகள் நுண்மை யினின்று வளர்ந்து பருமையாக நிறைவெய்தும், (பின் பருமை யினின்றும் தேய்ந்து நுண்மையாக ஒடுங்கும்) வளர்பிறை தேய்பிறை என்னும் இருவகைப் பக்கத்திலும் அவை அவ்வாறாதல் போல உடம்பில் உள்ள சந்திர மண்டலத்தின் ஆற்றல்களும் நுண்மை யினின்றும் வளர்ந்து பருவுடம்பில் நிறைதலும், பருவுடம்பினின்றும் தேய்ந்து நுண்ணுடம்பில் ஒடுங்குதலும் உடையவாம்.
Special Remark:
`சூக்குமம்` என்பது, ``சூக்கம்`` என மருவிற்று. உவமையில் வளர்தல் கூறியதனானே தேய்தலும் பெறப்பட்டது. அஃது, ``இருவகைப் பக்கத்துள்`` என்பதனானும் அறியப்படும் `அவ்வாறு எய்தும் கலைபோல` என்க. ஆம், அசைநிலை. ``துய்யது`` என்றது, சந்திரமண்டலத்தை, என்னை? சந்திரனோடு ஒப்பிக்கத் தக்கது அதுவேயாகலின், உவமையிற்போலப் பொருளிலும் `சூக்கத்தில், தூலத்தில்` என நீக்கப் பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு விரிக்க. ``காயம்`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `துய்யது காயத்தில் சூக்கத்தினின்றும் தூலத்தினின்றும் ஏறி இறங்கும்` எனக் கூட்டி உரைக்க. சந்திர மண்டலத்தின் ஆற்றலைத் தனக்கேற்ற வகையில் பெற்ற நுண்ணுடம்பையே நாயனார்மேல் (பா.625) `பரகாயம்` எனக் கூறியிருத்தல் இங்கு நினைவு கூரத்தக்கது.
இதனால், பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலம் அண்டத்தில் உள்ள சந்திர மண்டலத்தோடு ஒத்ததாதல் கூறப்பட்டது.