ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்

பதிகங்கள்

Photo

பொழிந்தவி ரும்வெள்ளி பொன்மன் றடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முதல் அங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகும் குணமது தானே.

English Meaning:
Guard Nectar From Flowing Out

Within the Golden Regions of Cranium
The sparkling nectar flows in cascades silvery;
There it was inside,
In the astral sphere above;
They who can guard it from flowing out,
Will become eternal young;
That is its blessing, for sure, for sure.
Tamil Meaning:
பிராசாத கலைகளின் வழிச் சத்தியால் பொழியப் பட்டு விளங்குகின்ற அந்த ஞானம், அகார கலை முதலிய கலைகளின் அளவில் சுவாதிட்டானம் முதலிய கீழ் இடங்களோடு நில்லாது, அருத்த சந்திர கலை முதலிய கலைகளின் வழி ஆஞ்ஞை முதலிய மேல் இடங்களை அடையுமாயின், அவ்விடத்தே அந்த ஞானத்திற்கு முத லாகிய சிவம் வியாபகப் பொருளாய் விளங்கித் தோன்றும். அதன்பின் அந்த அருத்த சந்திராதி கலைகளின் ஞானங்கள் மறைந்து முன் போலக்கீழே போய்விடாமல் காக்க வல்லவர்கட்கு அந்த ஞானம் முடி நிலை வளர்ச்சியை எய்தும். அதுவே, அந்தக் கலா யோகத்தின் பயனாம்.
Special Remark:
`புறத்துப் பொன்மன்றுபோல, அகத்தே விளங்குவது ஆஞ்ஞை` என்றற்கு அதனை, ``பொன் மன்று`` எனக் கூறுகின்றவர், அதனோடு இயைந்து ஓர் நயத்தைத் தோற்றுவித்தற்கு, பிராசாத ஞானத்தை, வெள்ளியாக உருவகம் செய்து கூறினார். ``வெள்ளி`` எனப்பட்டது இந்த ஞானமே என்பது, ``பொழிந்தவிரும் வெள்ளி`` என மேற்கூறியதனையே அனுவதித்துக் காட்டியதனானே இனிது உணரப்படும். இதனையும், ``பொன் மண்`` என்பது பாடம் ஆகாமையையும் உணராது `வெள்ளி, பொன்` என்றவற்றைச் சுக்கில சோணிதங்களாகக் கொண்டு உரைப்பின், அஃது இவ்விடத்திற்கு யாதோர் இயைபுமின்றிப் போதல் அறிந்து கொள்க.
இதனால், பிராசாத யோகத்தின் முடிநிலையும், அதன் பயனும் கூறப்பட்டன. குணம் - பயன்.