ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்

பதிகங்கள்

Photo

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.

English Meaning:
Immortality in Yoga Way

Alternating breath`s course from left to right vice and versa,
They who can force breath through spinal Sushumna
Shall know tiring none;
They can abolish sleep for ever
And attain God-awareness;
They die not;
Immortal they shall be.
Tamil Meaning:
இடநாடி. வலநாடி இரண்டையும் விடுத்து, நடு நாடியாகிய சுழுமுனை நாடியால் பிராணனைப் பயன்படுத்திக் கொள்ளும் யோகிகட்கு, உடல், நரை திரை மூப்புக்களால் தளர்தல் இல்லை. இதற்குமேல், உலக மயக்கத்தில் ஆழ்தலை ஒழித்துத் திருவருளை நினைந்திருக்க வல்லவர்க்கு அவர் தம் விருப்பத்திற்கு மாறாய் இறப்பு உண்டாகாது; அவர் விரும்புமளவும் இவ்வுலகில் வாழ்தல் கூடும்.
Special Remark:
பவ யோகிகள் சித்திக் களிப்பாலும், சிவ யோகிகள் திரு வருட் களிப்பாலும் மத யானைபோலக் களித்திருப்பர் என்பதனைக் குறிப்பால் உணர்த்துவார், சுழுமுனை நாடியைத் தும்பிக்கையாக உருவகம் செய்தார். இதனானே, விநாயகர் யோக மூர்த்தி யாதலும் விளங்கும். சுழுமுனையை உருவகித்தற்கு ஏற்ப ஏனை இட நாடி வல நாடிகளை இடக் கை வலக் கைகளாகவும், பிராணனை உணவாகவும் உருவகித்தார். பவ யோகிகள், ``வெற்று யோகந்தானே காய சித்தியைப் பயக்கும்`` எனக் கூறுதலை மறுத்தற்குப் பின்னிரண்டு அடிகளைக் கூறினார். `திருவருள் உணர்வைப் பெறுவார் யோகியருள்ளும் அரியர்` என்றற்கு, ``உண்பார்க்கு`` என்றாற்போல `உணர்வார்க்கு` என்று ஒழியாது, ``உணர வல்லார்கட்கு`` என ஓதி யருளினார். மூன்றாம் அடிக்கு இங்கு உரைத்தவாறு உரையாதார்க்கு அவ்வடி வெற்றெனத் தொடுத்தலாய் முடியும் என்க. ``வேண்டா`` என்பன இரண்டும், `நீங்காது வருவன நீங்கும்` என்னும் பொருள் குறித்து நின்றன.
இதனால், கேசரி யோகத்துள் பிராணாயாமத்தது சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.