ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு

பதிகங்கள்

Photo

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே. 

English Meaning:
Devotees Reach World of Siva

Hold fast unto His Feet,
Adore them with love,
Sing His praise
Study His Sacred lore
Constantly think of Him
You shall reach the World of Siva,
Received in full regalia
By the sacred Rishi concourse.
Tamil Meaning:
சிவபிரானது திருவடியைத் துணையாகப் பற்றி அன்பு செய்து, அவனது புகழைக் கற்றும், கேட்டும் ஒரு பெற்றியே ஒழுகுவார்கட்கு, பின்னர், முனிவர் குழாம் முழுவதும் சுவர்க்க லோகத்தே முன்வந்து எதிர்கொள்ள ஒளிமயமாகிய அவ்வுலகத்தை அடைதல் கூடும்.
Special Remark:
``பரன்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, `பதத்து` என்றார். பரன்புகழ் கற்றல், பிற நியம ஒழுக்கங்கட்கு உபலக்கணம் ``ஆங்கே`` இரண்டில் முன்னது, `ஒருபெற்றியே` என நியமத்தைக் குறித்தது. பின்னது செய்யுளில் சுட்டு முன் வந்தவாறு. `முற்றும்` என்னும் உம்மை தொகுத்தல். தெற்றுதல் - விளங்குதல். ``முனிவர்`` என்பது சிவயோகியர்க்கு உருத்திர கணங்களையும், ``சிவபதம்`` என்பது பவயோகியர்க்கு, `இன்ப உலகம்` என்னும் பொதுப் பொருட்டாய்த் தேவருலகத்தையும் உணர்த்தி நிற்கும். `சேர்தலும்` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், நியமத்தின் பயன் கூறப்பட்டது. `உயர்ந்தோராய்ப் போற்றப்படுதல் இங்குக் குறிக்கப்பட்ட சிறப்பு` என்க.