ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை

பதிகங்கள்

Photo

ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. 

English Meaning:
The Lord is of wisdom ripe;
He is our King,
As unto an army they swell,
In directions all to pray;
He creates the fleshy body,
He is the Primal One of Celestial Beings,
If you adore Him in love earnest,
He will His Grace grant.
Tamil Meaning:
சிவஞானம் கிடைக்கப்பெற்ற சிவனடியார்களை விரும்பி வழிபட்டால், எவ்விடத்தும் அரசர்கள் தம் படையுடன் வந்து வணங்க, சிறுபயன்களைத் தருகின்ற தேவர்க்கெல்லாம் முதல்வ னாகிய சிவபெருமானை அவன் அருளால் அடைந்து பேரின்பம் எய்துதல் கூடும்.
Special Remark:
`விளைந்தவரை என்னும் இரண்டனுருபு தொகுத்த லாயிற்று. நம்புதல் - விரும்புதல்; அன்புசெய்தல், `ஊனம்` என்பதும், `ஏனையது` என்பதும் கடைக்குறைந்து நின்றன. ஊனம் -குறை யுடைது. `அருளால்` என உருபு விரிக்க. ஈற்றடியில் உள்ள சொற்களை, `அருளால் எட்டி, ஏனையது விளைதலும் ஆம்` எனப் பின்முன்னாக நிறுத்தி, விகுதிபிரித்துக் கூட்டி உரைக்க. விளைதல் - விளையப் பெறுதல். `வணங்குவார்க்கு இப்பயனெல்லாம் விளையும்` எனவே, `வணங்காது பிணங்குவார்க்கு இவற்றின் மறுதலையாய அரச தண்டமும், இருளுலகமும் கிடைக்கும்` என்பது பெறப்பட்டது.
இதனால், மாகேசுர நிந்தை செய்வார்க்கு வரும் குற்றம் மறுதலை முகத்தாற் கூறப்பட்டது.
இங்கு நிற்கத்தக்கதாய இத்திருமந்திரம், பதிப்புக்களில் அடுத்த அதிகாரத்தில் காணப்படுகின்றது.