ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை

பதிகங்கள்

Photo

ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன போழுதே புகுஞ்சிவ போகமே. 

English Meaning:
Those who deride the Jnani
Are rid of benefits of good deeds done;
Those who revere him as holy,
Are rid of harm of evil deeds done;
Those who reach Jnani`s presence.
Will verily taste Siva Bhoga.
Tamil Meaning:
`சிவஞானியை நிந்திப்பதே நலம்` என்று கருதி நிந்திப்பவனும், அவ்வாறன்றி, `வந்திப்பதே (வணங்குவதே) நலம்` என்று அறிந்து வந்திப்பவனும் முறையே நல்வினையின் நீங்கித் தீவினையை எய்துபவனும், தீவினையின் நீங்கி நல்வினையை எய்துபவனுமாவர். ஏனெனில், சிவஞானிகட்கு அடியவரான பின்பே எவர்க்கும் சிவபெருமானது திருவருள் கிடைப்பதாகலின்.
Special Remark:
``ஞானி`` என்றது கிளைப்பெயர். ``நல்வினை தீவினை தீர்வார்`` என்றதனை, மேல் ``நிந்திப்பவன், வந்திப்பவன்`` என்றவற்றோடு நிரனிரையாக இயைக்க. `அவன்வயமாக` என ஆக்கம் வருவிக்க. போதல் - அடைதல். `ஈசனுக்கு அன்பில்லார் அடியவர்க்கன்பில்லார் (சிவஞானசித்தி. சூ. 12 - 2) ஆதலின், ``அவன் வயமானபொழுதே புகும் சிவபோகம்`` என்றார். இவ் ஏகாரம் பிரிநிலை. சிவனது திருவருளால் கிடைப்பது சிவானந்தமாகலின், அத்திருவருள் புகுதலைச் சிவானந்தம் புகுதலாகவே கூறினார். இங்கு ``நல்வினை, தீவினை`` எனப்பட்டவை, சிவ நல்வினை தீவினைகளேயாதலின், சிவ ஞானிகளை வந்திப்பவர் சிவபுண்ணியச் சீலராய் சிவஞானம் பெற்று அதன் வழிச் சிவானந்தத்தை எய்துதலும், சிவஞானிகளை நிந்திப்பவர் சிவாபராதிகளாய் அருநரகும், இழிபிறப்பும் எய்துதலும் பெறப் பட்டன. இதனாலன்றோ,
``நமக்கு உண்டுகொலோ, தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே`` -தி.4 ப.101
என அப்பரும் திருவாய்மலர்ந்தருள்வாராயினர்.
இதனால், `சிவனடியாரை வந்தியாதொழியினும். நிந்தித்தல் ஆகாது` என்பது கூறப்பட்டது.