ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை

பதிகங்கள்

Photo

போகமும் மாதர் புலவி யதும்நினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலின்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. 

English Meaning:
Learned are they in Vedic lore;
Knowing God is within them,
They bethought themselves to be God
And plunged into pleasures distracting
Forgetting all thought of God.
Tamil Meaning:
வேதத்தை ஓதும் உரிமை பெற்றமையால் `வேதியர்` எனப் பெயர்பெற்றிருந்தும் சிலர், மகளிர் இன்பத்தில் பற்று நீங்காமையால், சிவபெருமானை வழிபட நினையாமல், பிற தெய்வங் களை வழிபடுதலில் முனைந்து நிற்பர்.
Special Remark:
``வேதியராயும்`` என்பதனை முதலிற் கொள்க. ``மாதர்`` என்பது தாப்பிசையாய் நின்றது. `மாதரது போகத்தையும் புல வியையும் நினைந்து தமது நெஞ்சேயன்றி உடம்பும் அவர் வசப்பட்டு கிடக்கின்றாராதலின், நினைப்பொழிவார்` என்க. விகிர்தனாம் நீதி - உலகியலுக்கு வேறுபட்ட முறைமை. அது, மணிமுடி சூடாது சடைமுடி தாங்குதல், பொன்னாலும் மணியாலும் இயன்ற அணிகளை அணியாது எலும்பும் தலையும் பாம்பும் அணிதல், சந்தனம் குங்குமம் பூசாது சாம்பலைப் பூசிக் கொள்ளுதல், பட்டும் துகிலும் உடுத்தாது தோலை உடுத்தும் போர்த்தும் நிற்றல், யானை குதிரை சிவிகைகளில் ஏறாது எருதின்மேல் ஏறிவருதல் முதலிய ஒழுகலாறு. இதுபற்றி `அவன் இகமும் பரமுமாய செல்வம், இன்பம், வெற்றி என்பவற்றை அருள வல்லனல்லன்` என விடுத்து, அவற்றின் பொருட்டு அவனின் வேறாய ஒரு தெய்வத்தையோ, பல தெய்வங் களையோ அன்போடு வழிபடும் அறியாமையுடையார் வேதியருள்ளும் சிலர் உள்ளனர் என்பது பின்னிரண்டடிகளில் கூறப்பட்டது. எனவே, ``இது கற்றறி வுடையார்க்குச் சிவநிந்தையாம்`` என்பதும், ``இந்நிந்தையால் அவர் விரும்பிய பயன் கைகூடாமையேயன்றி, அவற்றிற்கு நேர்மாறாய தீங்கு விளைதலும், ஒரோவொருகால் பயன் கைகூடினும் அது நிலை பெறாது இடையே நீங்குதலும் உளவாம்`` என்பதும் கூறியவா றாயிற்று. இவற்றிற்கு, அமுதம் வேண்டிக்கடலைக் கடைந்த தேவர்க்கு ஆலகால விடம் கிடைத்ததும், நூறுபரிமேத வேள்வி செய்து இந்திர பதவியை அடைந்த நகுடன் அதனை ஒருநொடியில் இழந்து மலைப் பாம்பாய் நெடுங்காலம் இன்னலுற்றதும் போல்வனவாகிய வரலாறுகள் சிறந்த எடுத்துக் காட்டாதல் அறிக. `வேதத்தை ஓதும் வேதியர் தாமே அதன் விழுப் பொருளை உணரமாட்டாது இன்ன ராவார் எனின், ஏனையோரைப் பற்றிச் சொல்லவேண்டுமோ` என்ற வாறு. இவ்வேதியர் சுமார்த்தரும், வைணவரும் போல்வார் என்க. ``நீதியுள் நின்று`` என ஒருசொல் வருவிக்க.
``சிவபெருமான் முத்தியைக் கொடுப்பவன்`` என்பது எங்கும் எடுத்துச் சொல்லப்படுதற்குக் கருத்து, ``முத்தியை அவனன்றிக் கொடுப்பவர் பிறரில்லை`` என்பதேயன்றி, அவன் அதனிற் பன் மடங்கு சிறுமையுடையனவாய இகபர நலங்களை அருளமாட்டான் என்பதன்று. இது செயற்கரியவற்றைச் செய்யவல்லார் செயற்கெளிய வற்றைச் செய்தல் தானே பெறப்படும் முறைமை பற்றி விளங்குவதாம். இம் முறைமையை விளக்குதற்கு, `தண்டா பூபிகா நியாயம்` (தண்டம் - கழி. அபூபம் - பணியாரம். `பணியாரத்தைப் பூனை வந்து விழுங்காதிருத்தற்கு அதனை ஒரு கழியில் கட்டி வைத்திருக்க, ஒரு பூனை அந்தக்கழியை விழுங்கிவிட்டது என்பது அறியப்பட்டால், பணியாரத்தை விழுங்கியது என்பது தானே அமைதல்போல` என்பதே தண்டா பூபிகா நியாயம். மற்றைப் பூனைகளால் விழுங்கமுடியாத கழியை ஒரு பூனை விழுங்குமாயின், அது மற்றைப் பூனைகளால் விழுங்கத்தக்க பணியாரத்தை எளிதின் விழுங்குதல் தானே பெறப்படுதல் போலப் பிற கடவுளால் தரமுடியாத முத்தியைச் சிவபெருமான் கொடுப்பன் என்றால், அவன் பிற தெய்வங்களால் தரப்படுகின்ற இகபர நலங்களை எளிதின் வழங்குதல் தானே பெறப்படும் என்பது இங்குக் கொள்ளத்தக்கது.) என்றொரு நியாயம் கூறுவர் நியாய நூலார்.
இக்கருத்துப்பற்றியே திருமுறைகளில்,
``சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே, செயமகள் தலைவரே, கலைமகள் தர நிகழ்வரே, எழில்உரு உடையவர்களே, சிவபுரம் நினைபவர் புகழ்மிகும் உலகிலே, குலன் நிலனிடை நிகழுமே, வழி புவிதிகழுமே`` -தி.1ப.21
``அன்பன்அணிஆரூர் - நன்பொன் மலர்தூவ -
இன்பம்ஆகுமே``
``ஐயன்அணிஆரூர் - செய்ய மலர்தூவ -
வையம் உமதாமே`` -தி.1ப.91
``நீலமாமிடற் - றாலவாயிலான் - பாலதாயினார் -
ஞாலம் ஆள்வரே``
``அண்ணல் ஆலவாய் - நண்ணினான்றனை - எண்ணியேதொழத் - திண்ணம்இன்பமே``
``அம்பொன் ஆலவாய் - நம்பனார்கழல் -
நம்பிவாழ்பவர் - துன்பம் வீடுமே`` -தி.1ப.94
``அண்ணல் மருதனைப் பண்ணின் மொழிசொல்ல விண்ணுந்தமதாமே``
``எரியார் மருதரைத் தரியா தேத்துவார்
பெரியார் உலகிலே``
``எந்தை மருதரைச் - சிந்தை செய்பவர் - புந்தி நல்லரே``
``மறையார் மருதரை - நிறையால் நினைபவர் -
குறையார் இன்பமே`` -தி.1ப.95
``அரவன் அன்னியூர் - பரவுவார் விண்ணுக் -கொருவ ராவரே`` -தி.1ப.96
என்றாற்போல்வன பலவும் ஆங்காங்குப் பலபட எடுத்துக் கூறப் படுகின்றன. எனினும் வேதியரேயாயினும், இன்னோரன்ன அருள் முழக்கங்கள் செவியில் ஏறப்பெறுதலும், அவற்றில் தெளிவுண் டாதலும் முன்னைத் தவத்தாலன்றி ஆகாவாம்.
இனி, முத்தி சிவபெருமானால் அன்றிப் பிறரால் தரப் படாமையை,
பரசிவன் உணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையும் என்றும் விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல்
உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றுமுண்டோ.
-கந்த புராணம் - தட்ச காண்டம் - உபதேசப் படலம் , 25 மானுடன் விசும்பைத் தோல்போற் சுருட்டுதல் வல்ல னாயின் ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடும் எய்தும்;
மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும் உபாயமே அறிதல்வேண்டும்.
-காஞ்சிப் புராணம், சனற்குமார படலம், 43
அவனவ ளதுவெனு மவைதொ றொன்றுமிச்
சிவனலால் முத்தியில் சேர்த்து வாரிலை;
துவளரும் இம்முறை சுருதி கூறுமால்;
இவனடி வழிபடின் முத்தி எய்துவாய்.
-காஞ்சிப்புராணம், திருநெறிக்காரைக் காட்டுப் படலம், 29
என்றாற்போல்வனவற்றால் நன்கறியப்படும். வீடாவது பிறவி யறுதலேயாகலின், `அதனைப் பிறவியுடைய வேறு சிலரும் தருவர்` என்றல் பேதைமைப்பாலதேயாம். இவற்றுள், `சுருதி என்றது அதர் வணவேதம்` என்பது காஞ்சிப் புராண வயிரவேசப் படலத்துள் கூறப்பட்டது.
இதனால், பேதைமையால் சிவபெருமானை இகழ்தலும் குற்றமாதல் கூறப்பட்டது.