ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை

பதிகங்கள்

Photo

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூசையின் கீழது வாமே. 

English Meaning:
Those who have Jnana attained,
Rid of all doubts in their thoughts
Seek Him in love intense
Shall reach the World of Celestials;
If the low-born think any the less of Him,
Dismal indeed is their fate—
Like the parrot in cat`s claw.
Tamil Meaning:
யாவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருக் கோலத்தின் உண்மைகளை நூல்களாலும், நாட்டில் அமைந்த திருக் கோயில்கள், அவற்றில் நிகழும் விழாவகைகள் முதலியவற்றாலும் ஓர்ந்துணர்ந்து, அதனால் தெளிவுபெற்ற ஞானத்தை உடையராய் உள்ளத்தில் அன்புமிகப் பெறுவோர் பின்னர்த் தேவராவர். அவ்வாறு ஓர்ந்துணரவும், தெளியவும் மாட்டாத கீழ்மக்கள் அப்பெருமானை, எலும்பு, தோல், சாம்பல், வெண்டலை முதலியவைகளை உடைய வனாய்ச் சுடுகாட்டில் ஆடுதல், தலையோடு ஏந்தி இரத்தல் முதலிய வைகளையே நோக்கிச் சிறுதெய்வமாகக் கருதி இகழ்வார்களாயின், அச்செயல், கிளி ஒன்று தானே பூனையின் அருகுசென்று அகப்பட்டு நின்றது போல்வதாய்விடும்.
Special Remark:
``பதி நாடி`` என்றதனை முதலிற்கூட்டி உரைக்க. அளியுறுதல் - அன்பினால் நெகிழ்ந்து உருகுதல். `அமரராவர்` என்னும் ஆக்கம் விரித்துரைக்க. பதி - தலைவனாம் தன்மை. ``ஈசன்`` என்பது முன்னே ``பதி`` என்றதனோடும் ஆறாவதன் பொருள்படச் சென்று இயைந்தது. ``அமரர்`` என்றது பொதுப்பட உயர்நிலையைக் குறித்ததாகலின், பதமுத்த, அபர முத்தர் முதலிய பலரது நிலைகளும் கொள்ளப்படும். `அமராபதி` என்பது பாடம் அன்று. கீழது - கீழ்நின்றாற்போல்வதொரு செயல். கீழ் நிற்கும் நிலையை, ``கீழ்`` என்றார். இதற்குக் `கீழ்தல் - கிழித்தல்` எனப் பொருள் உரைப்பாரும் உளர். இங்குக்கூறிய உவமையை, `கூற்றத்தைக் கையால் விளித் தற்று` (குறள், 894) என்றாற் போல்வனவற்றோடு வைத்துக் காண்க. சிவபெரு மானது முதன்மையை அறியாது நிற்றல்தானே தீங்கு பயப்பதாக, அதன்மேலும் அப் பெருமானை இகழ்தல் விரையப் பெருங்கேடு எய்துவிப்பதாம் என்பது இவ்வுவமையாற் பெறப் படுவது. `இதற்குத் தக்கன் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு` என்பது முன்னர் கூறப்பட்டது (தி.10 பா.336 உரை).
நிந்தனை செய்வாரது இழிநிலை இனிது விளங்குதற்கு, துதித்தல் செய்வாரது உயர் நிலையையும் உடன் கூறிக்காட்டினார்.
இதனால், சிவநிந்தை உய்தியில் குற்றமாதல் கூறப்பட்டது.