ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை

பதிகங்கள்

Photo

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப்
பொருத்தமி லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

English Meaning:
Seek not the Sour Tamarind; Sweet Mango is at Hand
The sweet, ripe mango, tended with loving care,
They bury deep, deeming it unripe still;
And up the gnarled tamarind they climb for the sour fruit,
Only to break their limbs—they whom the senses beguile.
Tamil Meaning:
தமக்கு உறுதியை அறியாதவர் ஆத்தமனையாள் அகத்தில் இருக்கவே, பிறன் காத்த மனையாளைக் காமுறுதல், காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடருற்ற வாறன்றியும், தாம் செழிப்புறப் பேணி வளர்த்த தேமாமரத்தில் பழுத்த பழத்தைக் குறையுடையதென்று வீட்டில் புதைத்துவிட்டு, அயலான் வளர்த்த புளிமாமரத்தின் நுனிக்கிளையில் ஏறிக் கீழே விழுந்து கால் ஒடிந்ததையும் ஒக்கும்.
Special Remark:
தேமாமரத்தைத் திருத்தி வளர்த்தமை, மனைவி உள்ளத்தில் ஒத்த அன்பும், மனைமாட்சியும் வளர அவளோடு அள வளாவி வாழ்ந்தமையைக் குறித்தது. அறத்தொடும், புகழொடும் இயைந்த இன்பத்தையும், உண்டி முதலிய உபசரிப்பையும் தந்து எஞ் ஞான்றும் விரும்பப்படுதல் பற்றித் தன் மனைவியைத் தேமாங் கனியா கவும், அவற்றிற்கெல்லாம் மறுதலையாதல் பற்றி அயலான் மனைவியைப் புளிமாமரமாகவும் கூறினார். அருத்தம் - பாதி; குறை. மாம்பழத்தை அறையில் புதைத்தல் பிறர் கொள்ளாமைப் பொருட்டு. பொருத்தம் இன்மை - இயைபின்மை; அயல். காலறுதல் கூறின மையால், கொம்பு, நுனிக் கொம்பாயிற்று. காலறுதல், அவளைக் கொண்டவனால் அவ்வழி வந்த கால் வெட்டப்படுதல். நாலடியுள், ``காணிற் குடிப்பழியாம்; கையுறிற் கால்குறையும்`` (நாலடியார், 84) என்றது காண்க.
`நுனிக் கொம்பர் ஏறினார்`(குறள் 476) வீழ்ந்து காலொடிதலும் இயல்பு. நுனிக் கொம்பர் செல்லலாகாத இடத்துச் சேறலைக் குறித்தது. ``காலற்ற வாறு`` என்றதில், இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், வேறும் ஓர் உவமையால் மேலது வலியுறுத்தப் பட்டது.