ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்

பதிகங்கள்

Photo

செஞ்சுடர் மண்டலத் தூடுசென் றப்புறம்
மஞ்சண வும்முறை ஏறி வழிக்கொண்டு
துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.

English Meaning:
Five-Lettered Holy Word Leads to Samadhi

Penetrating the fiery Sphere of Sun
And passing beyond into the sphere of cloud-laden Meru
By the Adhara Way,
He (the yogi) there in Samadhi slumbers;
And then articulating the Holy Word
He sees the Lord
And is forever absorbed in His thought.
Tamil Meaning:
இறக்கும் நிலையை அடைந்த ஒருவன் அப்பொழுது இந்தக் காரண பஞ்சாக்காரத்தை இரண்டு முறையேனும் சொல்வா னாயின், அவன் சூரிய மண்டலத்தைப் பிளந்துகொண்டு, அப்பால் மின்னல் உலகத்தையடைந்து, பின்பு அதனையும் கடந்து சிவனையே தனக்கு உயிராகக் கொண்டிருக்கும் நிலையைப் பெறுவான்.
Special Remark:
``அபர முத்தியைப் பெறுவான்`` என்பதாம். `ஞானிகள் தாம் நின்ற உடலை விட்டு நீங்குங்கால் இங்குக் கூறியவாறு ஒளி வழியிற் சென்று இறைவனை அடைவார்கள்; ஞானம் இல்லாதவர்கள் பிறவழிகளில் சென்று தேவர் உலகம், அல்லது மானுடர் உலகம் இவற்றிற் செல்வார்கள்` என்பது உபநிடதங்களின் கருத்தாதல் சாந்தோக்கியம் பிருகதாரணியம் முதலிய உபநிடதங்களாலும், உத்தர மீமாஞ்சை நூலாலும் அறியப்படுவன. அவற்றுள், `ஒளிவழியில் சென்று இறைவனை அடையும் வீட்டு நிலை இக்காரண பஞ்சாக்கரக் கணிப்பினால் உண்டாகும்` என்பது இங்குக் கூறப்பட்டது.
``துஞ்சும் அவன் சொன்ன காலத்து`` என்பதனை முதலிற் கூட்டி, சொல்லுதலுக்குச் `சிவசிவ` என்னும் செயப்படுபொருளை அதிகாரத்தால் வருவித்து உரைக்க. ``நெஞ்சு`` என்றது உயிரை. `இறைவனையே உயிராகக் கொண்டிருத்தலாவது, அவனோடு பிரிவின்றி ஒன்றி, அவன் வழிப்பட்டு நிற்றல்` என்பதை நாயனாரே, ``நீங்கா நிலைபெற லாகுமே`` என விளங்க ஓதினார்.
இதனால், காரண பஞ்சாக்கரத்தால் பயன் எய்தும் முறை வகுத்துக் கூறப்பட்டது.
``கடல் நாகைக் காரோண, நின்
நாமம் பரவி நமச்சிவா யவ்வென்னும் அஞ்செழுத்தும்
சாம் அன்றுரைக்கத் தகுதிகண் டாய்எங்கள் சங்கரனே``*
என்னும் அப்பர் திருமொழியை இங்கு நினைவு கூர்க.