ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை

பதிகங்கள்

Photo

வளங்கனி தேடிய வன்தாட் பறவை
உளங்கனி தேடி உழிதரும் போது
களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி
நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே.

English Meaning:
Jiva-Bird Seeks Siva-Fruit

The Jiva-Bird,
With its feet planted firm (on Muladhara),
Seeks the Rich Fruit (that is Siva);
When within the heart that Fruit it seeks,
Lighting the Sushumna lamp
In the Flaming Fire of Kundalini within,
It reaches its great goal;
Its four cognitive organs,
Ever seek Him thereafter.
Tamil Meaning:
(மேல், ``பறவையில் கர்ப்பமும்``9 என்னும் மந்திரத்தில் சொல்லியபடி) உலகமாகிய மரத்தில் தனக்கு இனிமையான பழத்தைத் தேடி அலைந்த சீவனாகிய பறவை, பின்பு அந்தப்பழம் தன்னுள்ளே யிருப்பதை அறிந்து அதனைத் தேடி அங்கு அலைந்துகொண்டிருக்கும் பொழுது, அதற்குக் கண்ணும், சிறகும்போல உதவுகின்ற அந்தக் கரணங்களாகிய நால்வரும் முன்புபோலத் தீயராய் இல்லாது நல்லவராய் விட்டமையால், அங்கே (உள்ளத்துள்ளே) மிக்கு விளங்குகின்ற பேரொளியிலிருந்து சிறு கைவிளக்கை ஏற்றிப் பிடித்து, அப் பறவைக்கு உதவி புரிகின்றனர்.
Special Remark:
`பெத்த நிலையில் உலகியலில் ஈர்த்துச் சென்ற அந்தக் கரணங்கள், முத்தி நிலையில் சிவத்தை உணர்தற்குத் துணை புரிகின்றன` என்பதாம். `விளக் கனி, உளக் கனி` என்பன எதுகை நோக்கி, ஒத்த வல்லெழுத்து மிகாது, இனமெல்லெழுத்து மிக்கு முடிந்தன. தாள் - முயற்சி. களம் - இடம். `அக் களத்துக் கனிந்த அங்கி` என்க. கனிதல், இங்கே, மிகுதல், அங்கி - அக்கினி பேரொளி; பேரறிவு. `மலம் நீங்கிய உயிரின் அந்தக் கரணங்கள் பதிஞானத்தை உடையனவாகும்` என்பது உணர்க.
இதனால், சீவன் முத்தரது அந்தக் கரணங்கள் பாசத்தளை யாகாமை கூறப்பட்டது.