ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை

பதிகங்கள்

Photo

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியில் உற்றோர் பரானந்தர் போதரே.

English Meaning:
Jiva`s Task is to Seek Him

Receiving in full the Grace of Lord in Mukti State;
Purified of Tattvas, the Suddha State attaining,
To perform Tapas thus is Jiva`s task;
And so rid of Karmas, in devotion true they stand;
They indeed the Jnanis
In transcendental bliss immersed.
Tamil Meaning:
முத்தி நிலையை அடைந்தவர் சிவனது திருவருளை முழுமையாகப் பெறுவர். (எனவே, `ஏனையோர் சிறிது சிறிது பெறுவர்` என்றதாம்). அதனால், அவரே கருவி கரணங்களின் கட்டற்றவராவர் (கருவி கரணங்களோடு கூடியிருப்பினும் அவற்றால் உலகியலில் செல்லார்` என்பதாம்). ஆகவே, அவர் தன் முனைப்புக் கொண்டு `யான், எனது என்னும் வகையில்) உலகை நோக்கி ஒன்றைச் செய்தலும், அவ் வாறன்றிச் சிவனையே நோக்கி ஒன்றைச் செய்தலும் ஆகிய செயல்கள் எல்லாவற்றையும் விடுத்து, சொரூப சிவனிடத்து உண்மையான பத்தியில் மட்டுமே நிற்பர். அதனால், அவர் அடையும் ஆனந்தமே உண்மைப் பேரானந்தமாகும். உண்மை ஞானியரும் அவரே.
Special Remark:
`தன்பணி` என்பது, பொதுவாகச் சீவபோதச் செயலை உணர்த்தும் ஒருசொல். `தன்பணியையும், மெய்த்தவத்தையும் செய்கை யாகிய வினையை விட்ட பத்தி` என்க. மெய்த்தவம், சிவனை நோக்கிச் செய்யும் செயல்கள். உலகியற் செய்கையை நோக்க மெய்த்தவம் சிறந்ததாயினும் அதுவும் நான்` என்னும் போகத்தோடு செய்வதேயாகலின், அப்போதத்தை விட்டவர்க்கு அதுவும் வினையேயாம் என்றற்கு, ``மெய்த்தவம் செய்கை வினை`` என்றார். இஃதே பற்றித் தாயுமானார், ``நான் பூசை செய்யல் முறையோ``3 என்றார் மெய், மெய்ப்பொருள், சொரூப சிவன் `மெய்யின்கண் செய்யும் உண்மைப்பத்தி` என்க. உண்மைப்பத்தி, பிறிது பயன் விரும்பாது, அவனையே விரும்பிச் செய்யும் பத்தி இங்கும் பத்தியையே முடிநிலையாகக் கூறினமை உணரற்பாலது.
இதனால், முத்தி நிலையின் இயல்புகள் எல்லாம் சுருக்கிக் கூறப்பட்டன. இவையும், அடுத்து வரும் மந்திரத்தில் வருவனவும் ஆகிய இயல்பினை உடையோரே சீவன் முத்தராவர்.