ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்

பதிகங்கள்

Photo

கேவலந் தன்னில் கலவு சகலத்தின்
மேவும் செலவு விடாவிருள் நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

English Meaning:
Beyond Kevala, Sakala and Self-Realization States is Suddha Avasta

The Jiva in its primal condition
Is in the Kevala State;
When it mixes with Tattvas
It departs and enters the Sakala State;
Released from there,
It realizes the Self,
When it transcends all the states three,
It enters the Jagratatita State;
There it is Pure (Suddha).
Tamil Meaning:
கேவலாவத்தைக்குப் பின்பு ஆன்மாச் சகலத்தை அடைதலே கலவு நிலையாகும். (கலத்தல்மலத்தோடேயாகையால், இக்கலப்பு அசுத்தமேயாம். எனவே, கேவலத்திலிருந்த அசுத்தம் போய்விடவில்லையாம். முன்னை அசுத்தமே பின்னை அசுத்தத் திற்குக் காரணம் ஆகையால்) விடாது பற்றியுள்ள முதல் அசுத்தமாகிய இருள் நீங்கும் சமையத்தில் ஆன்மாச் சகல நிலையினின்றும் சிறிது சிறிதாக விலகி அப்பாற் செல்லுதலே செலவு நிலையாகும். (இது மலங்களினின்றும் நீங்கும் நிலையாகலின், `நின்மலாவத்தை` எனப்படும்) இந்நிலையில் ஆன்மாத் தன்னைக் காணுதல், பின் திரு வருளைக் காணுதல், பின் திருவருளைக் காணுதல், பின் பராசத்தியைக் காணுதல் இவை மூன்றும் முறையே நிகழ்ந்து நீங்கினால் சாக்கிராதீதம் வாய்க்கும். அதன் பின்பே நின்மலாவத்தை முடிவுபெறும்.
Special Remark:
தன்னைக் காணுதல் முதலிய மூன்றும் முறையே, `சைதன்னிய தரிசனம், ஞான தரிசனம், பரை தரிசனம்` எனத் துகளறு போதத்தில்* கூறப்படுதல் காண்க. சாக்கிராதீதம், `பரையில் அதீதம்` என்பதனோடு கூட்டி இரண்டாகவும், பரையில் அதீதத்தை யடுத்துச் சுத்தாவத்தையும் அந்நூலில்l கூறப்படுதலையும் காண்க. அந்நூலில் `சுத்தாவத்தை` எனப்பட்டதும், இம்மந்திரத்தில் `சுத்தம்` எனப் பட்டதும் நின்மலாவத்தையேயாம். ``மேவும், பாவும்`` என்றாராயினும், `கேவலந் தன்னில் சகலத்து மேவுதல் கலவு` எனவும், `விடா இருள் நீக்கத்துப் பாவுதல் செலவு` எனவும் உரைத்தலே கருத்தென்க. பாவுதல் - பரவுதல்; முற்றும் பொருந்துதல்.
இதனால், சகலாவத்தை சுத்தாவத்தைகளின் இயல்பு ஒப்பிட்டு உணர்த்தப்பட்டன.