ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்

பதிகங்கள்

Photo

ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல்
மேனி ஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த்
தானந்த மில்லாத தத்துவ மானவை
ஈனமி லாஅண்டத் தெண்மடங் காமே.

English Meaning:
God is Principle of Bliss Beyond Tattvas

On that Seat of Throne
He sits as Bliss-Principle (Tattva)
Five His Forms,
Thirty-six the Tattvas He pervades;
Nay,
The Tattvas He pervades
Are eight times by far as numerous
As universes in space Vast,
Himself beyond Tattvas end.
Tamil Meaning:
அண்டங்களாகிய ஆசனத்தின்மேல் ஆனந்தமாய் உள்ள மெய்ப்பொருள்தான் (வடிவமற்றதாயினும்) அருவம் இரண்டு, அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்துவடிவங்களைக் கொண்டு விளங்குதலால், அதனால் வியாபிக்கப்பட்ட முப்பத்தாறு முதனிலைப் பொருள்கள் தோன்றி, அழிவின்றி நிற்பனவே `தத்து வங்கள்` எனப்படுகின்றன. அவையே குறைவில்லாத அண்டங் களாய்க் காரியப்பட்டு, அளவிறந்து நிற்கின்றன.
Special Remark:
ஐந்துவடிவங்கள் மேல், \\\"சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்`` 3 என்னும் மந்திரத்தின் உரையில் சொல்லப்பட்ட `சிவம், சத்தி, சதாசிவன், மகேசுரன்` என்பவற்றோடு `வித்தை` என்பதுமாகும். ஆகி நின்று செயலாற்றுதலால். முப்பத்தாறு தத்துவங்களில்மேல் உள்ள ஐந்தையும் மெய்ப்பொருள்தானே நேரே செயற்படுத்துகின்றது. கீழ் உள்ள முப்பத்தொன்றினைப் பிறரைக்கொண்டு செயற்படுத்து கின்றது. `தத்துவம்` எனப்படுவன முதற் காரணப் பொருளாய் ஊழி முடிவுகாறும் அழியாது நிற்பன ஆதல் பற்றி, \\\"தான் அந்தம் இல்லாத தத்துமானவை`` என்றார். \\\"தான்`` என்றது பன்மையொருமை மயக்கம். `தத்துவமானவை அண்டமாய், எண்மடங்கு ஆம்` என்க. ``எண் மடங்கு`` என்பது மிகுதியைக் குறிப்பதொரு வழக்கச்சொல். அண்டத்து - அண்டமாம் நிலையில். `அண்டங்கள் குறைந்த எண்ணிக்கையையும், தத்துவங்கள் அவற்றினும் மிக்க எண்ணிக்கை யையும் உடையன` என உரைப்பார்க்கு, `அவ்வாறான மேற்கோள் எங்குளது` எனத் தெரியவில்லை.