ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்

பதிகங்கள்

Photo

பெறுவ பகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணலள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.

English Meaning:
Cosmic Space is God`s Seat of Throne

In the vast spaces of Cosmos
Are universes numberless
That evolved and separated;
Countless are they
Like the sands that are
On the shores of seven seas;
Sparkling as a jewel of gold
That dazzles
They form His Seat of Throne
—For Him, the Lord of Celestials.
Tamil Meaning:
அண்டங்களை ஆசனமாகக் கொண்டு, அவற்றிற்கு மேலே விளங்குகின்ற சிவபெருமான், உயிர்களால் பற்றப்பட்டுப் புறமும், அகமுமாய்ப் பல்வேறு வகையில் அமைந்துள்ள அண்டங்கள் எண்ணிலவாய் நிற்க, அவை அனைத்திலும், கட்பொறிக்குப் புலனாகின்ற மாற்றொளியையுடைய, பொன்னால் ஆகிய அணிகலன்போல அவற்றினுள் நிறைந்திருக்கின்றான்.
Special Remark:
பெறுதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. ``எறிகடல் ஏழின் மணலளவாக`` என்றது, `எண்ணிலவாக` என்றபடி, ``ஒளி`` என்றதனால், பொறி, கட்பொறியும், ``பொன்`` என்றதனஆல், ஒளி, பொன்னினது மாற்றொளியும் ஆயின. `பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் உள்ளனவாயினும் அவற்றது ஒளியையே மக்கள் நோக்குதல் போல, அண்டங்களிலே சிவபெருமான் நிறைந்திருப் பினும், அண்டங்களை மட்டுமே உயிர்களை உணர்கின்றன` என உவமையை, உணர்ப்படுதல் படாமை பற்றிய ஒரு புடை உவமையாகக் கொள்க.
``அண்டம் ஆரிரு ளூடுகலந் தும்பர்
உண்டு போலும் ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவார் எலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``l
எனவும்,
``அண்டங் கடந்தபொருள்; அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்``8
எனவும் ஓதினாற்போல இவரும், ``அண்டாசனத் தேவர்பிரான்`` என ஓதினார். `விளங்கி` என்பதை `விளங்க` எனத்திரித்து, `அண்டங்கள் விளங்கத்தான் அவற்றினுள் விளங்காது நிறைந்திருப்பான்` என்க.
இதனால், `தத்துவங்களின் காரியமாகிய அண்டங்கள் எண்ணிலவாம்` என்பது கூறப்பட்டது. `தேவர்பிரான் செறியும்` என்றது, அவை அவனால் நிலைபெறுதலை உணர்த்தியவாறு.