ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்

பதிகங்கள்

Photo

உன்னு மளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயனென் றறிந்துகொண் டேனே.

English Meaning:
He is Para-Bindu

The One whom I in contemplation realize,
The One Param whom Vedas praise,
The Undying Light in me shines,
Him I beheld, as Divine Swan (Para Bindu).
Tamil Meaning:
சிவன் தன்னை நினைப்பவரையே தான் நினைப் பான். பல பொருள்களையும் சொல்லுகின்ற வேதங்கள் பிறரைப்போல அல்லது தன்னைப் பலவிடத்தும் பெரும்பான்மை எடுத்துச் சொல்ல நிற்பவன். என் உள்ளே என்றும் ஒளிகுறையாத விளக்காய் உள்ளவன். `அவன் உயிர்களிடத்து அன்னப் புள்ளாய் இருக்கின்றான்` என்னும் அரிய உண்மையினை நான் திருவருளால் அறியப்பெற்றேன்.
Special Remark:
அன்னப் பறவைக்கு, `அம்சம்` என்பதும் ஒரு பெயர் அதனால் அம்ச மந்திரத்தை `அன்னம்` எனக் குழூஉக்குறியாக வழங்குதல் சித்தர் மரபு. அம்ச மந்திரமே பிராணனை இயக்குவது. அஃது `அசபை எனப்படும். அதனை நாயனார் நான்காந் தந்திரத் தொடக்கத்திலே கூறினார். சிவனது சத்தியே அம்ச மந்திரத்தை இடமாகக் கொண்டிருந்து பிராணனை இயக்குகின்றது ஆதலின் அவ்வுண்மையைத் திருவருளால் உணர்ந்த நான் பிராணனோடு கூடிப் பிராணமயனாய் நிற்கும்பொழுதும் சிவனை மறக்கிலேன் என்றபடி,
``என்னில் ஆரும் எனக்கினி யார்இலை;
என்னி லும்இனி யான்ஒரு வன்உளன்;
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்(கு)
என்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` *
என்றருளிச் செய்ததும் காண்க. புறம்போந்து பின் உட்புகுதல் பிராணனின் இயல்பாதலை நினைக்க. முதல் மூன்று அடிகளிற் கூறியன அவன் அன்னமயன் ஆதலை வலியுறுத்தும் குறிப்பின. ``அறிந்துகொண்டேனே`` என்னும் சொல்லியல்பால், `திருவருளால்` என்னும் இசையெச்சம் பெறப்பட்டது.
இதனால், பசு பிராணனாம் முறைமை கூறுங்கால் அந் நிலையும் சிவனருளால் உளதாதலை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.