ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்

பதிகங்கள்

Photo

உருவிப் புறப்பட் டுலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறைஅறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறைஅறி வாளர்க்(கு)
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

English Meaning:
Those Who Know the Sun Within is Worthy of Adoration

They penetrate not the Adharas,
Search not the world within,
And know not where in its midst Sun is;
Those who know where he furtive lies
To them my heart
In love melts.
Tamil Meaning:
[இம் மந்திரம் அண்டாதித்தன், பிண்டாதித்தன் இருவர்க்கும் பொருந்தக் கூறியது.]
அண்டாதித்தன் கீழ் நின்றும் ஊடுருவி மேலே புறப்பட்டு உலகைச் சுற்றிச் சென்று, முடிவில் ஒடுங்கி நிற்பது உலக முதல்வ னாகிய சிவனிடத்திலாகும். அவ்வாறே பிண்டாதித்தனும் மூலா தாரத்திற்குக் கீழ் நின்றும் உருவி மூலாதாரத்திலே வெளிப்பட்டு மேலே ஏனை ஆதாரங்களையும் கடந்து, முடிவில் ஒடுங்கி நிற்பது ஆஞ்ஞை யில் உள்ள சதாசிவ மூர்த்தியினடத்தி லாகும். ஆகவே எவ்வகை யிலும் உயிர்கட்குப் புகலிடமாகின்றவன் சிவனேயாவன். ஆயினும் இவ்வுண்மையை அறிபவர் உலகில் இல்லை. அறிபவர் எவரேனும் இருப்பின், எனது உள்ளத்தில் உள்ள அன்பு அவரிடமே சென்று உருகி நிற்கும்.
Special Remark:
`ஆதித்தன்` என்பது முதற்கண் அதிகாரத்தால் வந்து இயைந்தது. உருவிப் புறப்படுதல் மேல், ``பாரையிடந்து`` என்னும் மந்திரத்திலும் சொல்லப்பட்டது.
இதனால், ஆதித்த ஞானத்தால் விளையும் பயன் கூறப்பட்டது.