ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்

பதிகங்கள்

Photo

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றிய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

English Meaning:
Vision Sun Within Through Spinal Way

Standing, sitting, walking and lying prostrate
Nandi the benevolent in my thoughts incessant stood;
Destroy your Malas (Impurities)
And ascend the Adharas
Through Sushumna Central;
There shall you vision the Sun
That within shines in brightness nonpareil.
Tamil Meaning:
உயிர்கள் உடம்போடு கூடிநிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் முதலிய எத்தொழிலைச் செய்யினும் அவ் வுயிர்களில் அழுந்தப் பொருந்தியுள்ள சிவன் அவற்றின் உடம்பில் உள்ள ஆதாரங்களில் நீக்கமின்றி நிற்கின்றான். பிராணவாயு இடநாடி வல நாடிகளை ஒழித்து நடுநாடி வழியாக ஓடினால் அஃது ஆதித்தனைப் போல ஒளியுடையதாய்க் காணப்படும். அந்த ஒளியில் சிவன் மும்மலங்களை ஒழித்து, உயிர்களின் தற்போதத்தையும் அடக்கி, அவற்றின் அறிவுக்கறிவாய் விளங்குவான்.
Special Remark:
`ஆகவே, நடு நாடி வழியே ஓடும் பிராணனே பிண்டாதித்தனாம்` - என்றபடி. `வல நாடி வழியாக ஓடும் பிராணனைப் பொதுவாக `ஆதித்தன்` என வழங்குதல் மரபாயினும் அஃது உண்மையில் ஆதித்தனாய்ப் பயன் தருதல் நடுநாடி வழியே ஓடும் பொழுதுதான்` என்பது கருத்து. உலகப் பொருள் உள் புறத்தல் புலப்பட்டு விளங்குதல் அண்டாதித்தனால் ஆதல் போல, உயிர்ப்பொருளாகிய சிவம் அக்தில் புலப்பட்டு விளங்குதல் நடு நாடி வழியாக ஓடும் பிராணனால் ஆதலின் அது பிண்டாதித்தனாதல் விளங்கும்` என்றற்குச் சிவனது அகநிலையை இங்கு வகுத்துக் கூறினார். `நின்றால்` முதலியன ``நின்று`` முதலியவாகத் திரிந்தன. ``கருத்து`` என்றது ஆதாரங்களை. மலங்கள் கொன்று வென்று விளங்கும்` என்பதை இறுதியிற் கூட்டி, அதற்கு `அந்நந்தி` என்னும் எழுவாயையும், ஓடுதற்கு. `பிராணன்` என்னும் வினைமுதலையும் வருவிக்க. `சுடராய்` என்பதில் ஆக்கச் சொல் தொகுத்தலாயிற்று. ``காணும்`` என்றது, `காணப்படும்` என்றபடி.
இதனால், `பிண்டாதித்தனாவது இது` என்பது உணர்த்தப் பட்டது.