ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்

பதிகங்கள்

Photo

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே. 

English Meaning:
Lotus Cranial

There is a lotus
That neither land nor water knows;
No stalk, no root, the lotus blossomed yet!
City there was none; yet Light there is one!
Neither above nor below is a flower, none had heard of.
Tamil Meaning:
இது பிசிச் செய்யுள் ஆதலின், இதனை விடுத்துக் காணுமாறு:- பங்கயம் - தாமரைக் கொடி. ``இது, மண்ணும், தண்ணீரும் இல்லாமலே முளைத்து வளர்ந்தது`` என்றதனால், சுழுமுனைத் தண்டைக் குறித்தது. ``அக்கொடிக்குச் சல்லிவேர், ஆணிவேர் முதலியன இல்லாமலே பூப் பூத்தது`` என்றதனால், அஃது அத்தண்டு ஆதார பங்கயங்களை உடைத்தாதலைக் குறித்தது. தார் - இழை போன்றவை. ``ஊர்`` என்றது ஊரின்கண் வாழ்வாரை. ``அவர் (ஏற்றுவார்) ஒருவரும் இல்லாமலே காணப்படுகின்ற விளக்கு ஒன்று உண்டு`` என்றதனால், அஃது, அவ்வாதார நிராதாரங்களில் ஏற்ற பெற்றியால் விளங்கும் அருளுருவத்தைக் குறித்தது. பூ - நிலம்; உலகம் ``காட்சிக்கு வாராது, ஆசிரியர் தம் அருள் மொழிக் கேள்வி யால் அறியப்படுகின்ற உலகம்`` என்றதனால், அஃது அண்டத்தைப் போலவே பிண்டத்திற்குக் கொள்ளப்படும் உலகங்களைக் குறித்தது. கீழ்மேல் இல்லை என்றதனால் அவை பாவனைப் பொருளாதல் குறிக்கப்பட்டது. ``பூவிற்கு` என்னும் நான்கன் உருபு தொகுத்தல் ஆயிற்று.
Special Remark:
``யோக நெறியில் உள்ள பொருள்கள் இத்துணை வியப்புடையன`` என்றவாறு. இதனை இவ்விடத்திற் கூறினார். ``மான் தோல், புலித்தோல, தருப்பை முதலிய ஆசனங்களின் மேல் இருத்தலும் காடு, மலை, முழை முதலிய இடங்களில் தனித்திருத்தலும் போல்வன இல்லாமல், கட்டிலிற் பஞ்சணையின் மேல் துணைவியுடன் கிடந்தும் முனிவராய் நிற்கும் வியத்தகு நிலையும் யோகத்தால் கூடும் என்பது தோன்றுதற்கு.
இதனால், ``பரியங்க யோகம் வியப்புடையதொன்று`` என்பது கூறப்பட்டது.