ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 3. நியமம்

பதிகங்கள்

Photo

தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

English Meaning:
Tapas, meditation, serenity, and holiness
Charity, vows in Saiva Way and Siddhanta learning
Sacrifice, Siva puja and thoughts pure
—With these ten, the one in Niyama perfects his Way.
Tamil Meaning:
தவம் முதலாக மதி ஈறாகச் சொல்லப்பட்ட பத்தினையும் நியமமாகக் கொண்டவன் நியம யோகியாவான்.
Special Remark:
தவம், நெறிப்பட்ட வாழ்க்கை. செபம், வாய்ப்புப் பெற்றுழி மந்திரங்களை மிகுதியாகக் கணித்தல், ஆத்திகம், நூல்களில் சொல்லப்படும் கடவுள், இருவினை, மறுபிறப்பு, துறக்க நிரையங்கள் உள்ளன என உணரும் உணர்வு. சந்தோடம், `உள்ளது போதும்` என்னும் உள்ள நிறைவு. தானம், பொருளை நல்வழியில் ஈட்டி, உயர்ந்தோர்க்குக் கொடுத்தல். சிவன் விரதம், சிவனுக்குரிய சிறப்பு நாள்களில் தவச்செயல்களை மிகச் செய்தல். சித்தாந்தக் கேள்வி, சிவாகமங்களின் ஞானபாதப் பொருளைக் கேட்டல். மகம், இயன்ற பொழுது தீ வேட்டலைச் செய்தலும், செய்வித்தலும். சிவபூசை, சிவலிங்க வழிபாட்டினை இன்றியமையாததாகக் கொண்டு, விடாது செய்து வருதல். ஒண்மதி, நற்பண்பு. நியமமும் இவ்வாறு ``பத்து`` என வரையறுத்து ஓதப்படினும், இவை போல்வன பிறவும் கொள்ளப்படும் என்க. நிவம் - நிபந்தம். மகம், உயிரெதுகை.
இதனால், நியமம் சிறப்பாகப் பத்தாதல் கூறப்பட்டது. இதனை,
பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
பூசனைப் பெரும்பயன் ஆசாற் களித்தலொடு
நயனுடை மரபின் நியமம் ஐந்தே.
என்றார் நச்சினார்க்கினியர்