ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை

பதிகங்கள்

Photo

பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே. 

English Meaning:
In the hearts of those-who are firm of mind
Lie the (Varmamus) lizard of Yoga Vairagya
It lay besieging nose and tongue—(in Kesari Mudra)
In the troubled thought that knows but torture,
The only thing that stands still
Is devotional Patience Exceeding.
Tamil Meaning:
பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது.
Special Remark:
கடுஞ்சொற் பேசுதற்குக் காரணமான வெகுளியை, அடக்கமின்றிப் பலகாலும் படபடத்து ஒலிக்கின்ற பல்லியாக உரு வகித்தார். அது மூக்கையும் நாக்கையும் மூடிக்கிடப்பதாகக் கூறியது, அவை இரண்டுமே எழுத்தொலி புறப்படும் இடமாய் இருத்தல் பற்றி. வெகுளியால் முணுமுணுக்கின்றவர்கட்குப் பேச்சுப் பெரும் பான்மையும் மூக்கின் துணையோடே நிகழ்தல் அறிக. தெற்றுதல் - துடைத்தல். ``பற்றி நின்றார்`` என்றதற்குச் சொல்லெச்சத்தால் வந்தியைந்த `பற்று` என்பது தானே `தெற்றுதல், சிதைத்தல். என்ப வற்றிற்கும் செயப்படு பொருளாதல் காண்க. `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களுள் நடுவுநின்ற வெகுளியுளதாயின் ஏனை இரண்டும் நீங்கினவாகா ஆதலின், அவ்விரண்டையும் விட்ட மாகேசுரர் வெகுளியுடையராதல் கூடாது என்பதனை வலியுறுத்தற்கு, வெகுளி, காமமும், மயக்கமும் உடையாரையே பற்றிநின்று கடுஞ் சொற் பிறப்பித்தலை உடன் கூறினார். அதனானே, மாகேசுரர் கடுஞ் சொற் கூறலாகாமையும் பெறப்பட்டது. ஆளுடைய பிள்ளையார் சமணரால் இடப்பட்ட தீயைப் `பாண்டியன்பால் செல்க` என வெஞ் சொற் சொல்லியது` மாகேசுரராய அவர்க்குத் தகுவதோ` என ஐயுறாமைப் பொருட்டன்றே அவர், ``செல்க`` என வாளா கூறாது, ``பையவே செல்க`` எனப் பணித்தமையை எடுத்துக்காட்டி, ``பையவே `` என்றாராயினும் ``செல்க`` என்றது என்னை என்பார்க்கு.
``... ... ... அரசன்பால் அபராதம் உறுதலாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடையன் ஆத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார்``
-தி.12 பெ.பு.ஞானசம். 705
என விளக்கியருளினார் சேக்கிழார். அப்பர் பெருமான், தம்மை நீற்றறையில் இடுதல் முதலியவற்றைச் செய்தும், செய்வித்தும் நின்றார் மாட்டு வெகுளுதலும், வெஞ்சொற் சொல்லுதலும் இன்றிவாளா அமைந்திருந்தமை, மாகேசுரரது பொறையுடைமைக்கு எல்லையாய் அமைந்ததோர் எடுத்துக்காட்டாதல் அறிக.
``வற்றாதெழுவது`` என்றது குறிப்புருவகம். `வற்றா தொழிவது` என்பது பாடம் அன்று. பயிர்வளர்வதற்கு நீர்போலச் சிவபத்தி வளர்வதற்குப் பொறை யுடைமை இன்றியமையாததாதலின் அதனை நீராக உருவகம் செய்தார்.
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தைவித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலியிட்டுச்
செம்மையுள் நிற்பராகில் சிவகதி
விளையு மாறே. -தி.4 ப.76 பா.2
என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தார்.
இதனால், `மாகேசுரர் பிறர் செய்யும் மிகையைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
இதன் பின் பதிப்புக்களில் காணப்படும், ``ஓலக்கம் சூழ்ந்த`` என்னும் திருமந்திரம் சிறிது வேறுபட முன்புவந்துள்ளதே. (பா. 91).