ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்

பதிகங்கள்

Photo

அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே. 

English Meaning:
``Of a certain will I espouse
My Lord of Divine Feet``, thus saying
As Mountain King`s daughter incarnate
Sakti performed penances severe;
For all celestial beings to witness,
For all earthly beings to delight,
In adoration intense to Primal Lord Divine.
Tamil Meaning:
உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது `சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன்` (அவனுக்கு மனைவியாவேன்) என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். பின் தேவரும் அறியும்படி இந்நிலவுலகில் அவனை அன்புடன் வழிபடுதலும் செய்தாள்.
Special Remark:
`அதனால் சிவபெருமான் யாவராலும் வழிபடத் தக்கவன் என்பது விளங்கும்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியை முதலிற்கொண்டு உரைக்க. ``அரசன்`` என்றற்கு ``முடிசேர் மலைமகனார்`` என்றார். ``உமையம்மை`` என்னும் எழுவாய் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், உமையம்மையே சிவனை வழிபட்டமை கூறப் பட்டது. இத்தகைய தலங்கள் காஞ்சி முதலியனவாகச் சிறப்புற்று விளங்குதல் அறிக.