ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை

பதிகங்கள்

Photo

தோன்றிய எல்லாந் துடைப்பன் அவன்அன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. 

English Meaning:
What He creates, none but He destroys;
On their devout heads, the Just bore aloft His Holy feet;
Who chant the pure name with ardour
And cling thereof, in the Society of the Just they meet.
Tamil Meaning:
தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ஒடுக்கு பவன் சிவபெருமானே. அதனால் `அயன், அரி, அரன்` என்னும் பிறர் மூவரும் என்றும் அவனது ஆணையை ஏற்று நிற்பவரே. ஆதலின், அம் மூவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரத்தையே, `மற்றுப் பற்றின்றிப்` (தி.7 ப.48 பா.1) பற்றி நிற்பவரே உண்மையாக நடுவு நிற்பவராவர்.
Special Remark:
சிவபெருமானே முதற்கடவுள் என்பது உரை யளவையான் அன்றிப் பொருந்துமாற்றானும் துணியப்படும் என்றற்கு, ``தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன்`` என்றார். `எல்லா வற்றையும் ஒடுக்கியபின், எஞ்சிநிற்பவன் அவற்றை ஒடுக்கியவனே ஆதலாலும், அவனை ஒடுக்குவார் பிறர் இன்மையாலும், `ஒடுக்கக் காலத்தில் வேறு சிலரும் ஒடுங்காது நிற்பர்` எனின், அதனை, `முற்ற ழிப்புக் காலம்` (சருவ சங்கார காலம்) என்றல் கூடாமையானும் ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவிப்பவன் ஒடுக்குபவனேயாதல் தெற்றென விளங்கும்; விளங்கவே, ஒடுக்கத்தைச் செய்பவனே உலகத்தைத் தோற்றி நிறுத்தி ஒடுக்கும் முதற்கடவுள் என்றற்கு ஓர் ஐயமில்லையாம்` என்பது கருத்து.
``வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாய் இலர்`` -தி.3 ப.54 பா.3
என்ற திருப்பாசுரத்திற்கும் இதுவே கருத்து என்றார் சேக்கிழார். (தி.12 பெ. பு. திருஞான - 828; 829) எனவே, ``ஈமம்இடு சுடுகாட்டகத்தே - ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்பன்`` (அம்மை மூத்த திருப்பதிகம் 1, 3) என்றாற்போலும் திருமொழிகளில் சிவபெரு மானைச் சுடுகாட்டில் ஆடுவானாகக் கூறுதலின் உண்மையும், முற்றழிப்புக் காலத்தில் அவன் ஒருவனே நின்று, ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவிக்கு மாற்றை எண்ணுதலே யாதல் விளங்கும். இவ்வுண்மை உணரமாட்டாதார், ``கோயில் சுடுகாடு`` (தி.8 திருச்சாழல், 3) என்பதற்கு, `திருக்கோயில்கள் பலவும் பெரியாரை அடக்கம் செய்த சமாதிகள்` என்பதே பொருள் எனக் குழறிவழிவாரும், `உருத்திரன் கோயில் மசானபூமி யாதலின், அதனுட் புகலாகாது` எனக் கூறி எரிவாய் நிரயத்திற்கு ஆளாவாரும் ஆவர் என்க. இங்ஙனம் பலவாற்றானும் உண்மை விளங்கி நிற்றல் பற்றியே, மெய்கண்டதேவர்,
``அந்தம் ஆதி என்மனார் புலவர்``
-சிவஞானபோதம், சூ - 1.
என்றும்,
``சங்காரமே முதல்`` -சிவஞானபோதம் அதிகரணம் - 3.
என்றும் அறுதியிட்டுரைத்தார்.
செய்யுளாதலின், ``அவன்`` எனச் சுட்டுப் பெயர் முன் வந்தது. ``அன்றி`` என்பது, `மற்று` என்னும் பொருட்டு. மூன்று நின்றார் - மூன்று என்னும் எண்பெற நின்றார். இதனை முன்னருங் கூட்டுக. `தோன்றிய எல்லாம் துடைப்பன் ஈசன்; அன்றி மூன்று நின்றார், என்றும் அவன் இணையடி ஏன்று நின்றார்; அதனால், அம்மூன்று நின்றார்க்கும் முதல்வன் திருநாமத்தை நான்று நின்றாரே நடுவாகி நின்றார்` என இயைத்துரைக்க.
`பலரது வழக்குகளைக் காய்தல், உவத்தல் இன்றி நடுவு நின்று ஆராய்ந்து உண்மை கண்டு கூறுவார், இச்சமய வழக்கினையும் அவ்வாறு ஆராய்ந்து கண்டு கூறாதொழியின், அவர்க்கு நடுவு நிலைமை நிரம்பாது` என்பதாம்.
இதனால், உண்மை நடுவு நிலைமை இது என்பது கூறப் பட்டது.