ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு

பதிகங்கள்

Photo

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே. 

English Meaning:
The mountain torrent rushes down from the heights,
Boundless like the love from the pure heart,
Foamless, stainless, clear and crystalline,
It is fit for bathing the Lord.
Tamil Meaning:
எம்தந்தையாகிய சிவபெருமான் பொழிகின்ற திருவருளாகிய வெள்ளம் அன்பரது நெஞ்சகத்தினின்றும் ஊறுகின்ற சூக்குமமாகிய தெளிநீராம் ஆதலின், அதற்கு உலகில் மழையால் மலையினின்றும் பாய்கின்ற வெள்ளிய அருவி நீர்க்கு உள்ளதுபோல இடமும், காலமும் சுட்டும் சொல்லில்லை; நுரை இல்லை; மேலே மூடுகின்ற பாசியில்லை; கரையில்லை.
Special Remark:
``நுரையில்லை மாசில்லை`` என்பதனை இறுதியடியின் முதலிற் கூட்டுக. ``நுரை இல்லை`` என்றது, `பயன்படா தொழியும் கூறில்லை` எனவும், ``மாசில்லை`` என்றது, `பாசத் தொடர்பு இல்லை` எனவும் கூறியவாறாம். எனவே, `அமுத ஊற்று` என மேல் சிறப்பிக்கப்பெற்ற நீர்மழையினும் இறைவனது கருணைமழை மிகச் சிறந்தது என்பது கூறும் முகத்தால், `இறைவனது கருணையானே மழை உளதாகும்` என்பது உணர்த்தப்பட்டதாம். ``முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே - என்னப் பொழியாய் மழை`` என மாணிக்கவாசகர், மழையை இறைவன் கருணையோடு உவமித்ததும் இதுபற்றி. இக்கருத்தே பற்றித் திருவள்ளுவரும் வான்சிறப்பைக் கடவுள் வாழ்த்தினை அடுத்து வைத்தார். இதனானே மக்களது ஒழுக்க மும், ஒழுக்கம் இன்மையும் மழைக்கும், மழை இன்மைக்கும் நேரே காரணமாகாது, இறைவனது திருவுள்ளத்திற்கு உவகையும் வெகுளி யும் உளவாக்கும் முகத்தால் காரணமாம் என்பது பெறப்பட்டது. சிறந்த ஒளியாதல் பற்றித் திருவருளை, ``கழுமணி`` என்றார்.
இதனால், மழை இறைவனது திருவருள் வடிவாதல் கூறப் பட்டது.