ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு

பதிகங்கள்

Photo

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே. 

English Meaning:
The fertilising flood of rains outpouring
Makes trees and plants bloom enriched with sap;
The areca palm, coconut, cane and plantain green.
And nux vomica – stand laden rich with crop.
Tamil Meaning:
வற்றாத அமுத ஊற்றுப்போலச் சுரந்து பொழிகின்ற பெரிய மழைநீராலே பயன் சுரக்கின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்வனவாம். இனி உழவரால் பயிரிடப்படுகின்ற கமுகு, இனிய நீரைத் தருகின்ற தென்னை, கரும்பு, வாழை முதலியனவும் அம்மழையினாலே மக்கட்கு நிரம்பிய உணவைத் தருவனவாம். இனி எட்டி போன்ற நச்சு மரங்களும் அம்மழையினால் உளவாவனவேயாம்.
Special Remark:
முதற்கண், ``அமுதூறும்`` என்பதன் இடையில் `போல` என்னும் உவம உருபு விரிக்க. `நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்` (தி.10 ஆறாம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுமாறுபோலவே, இயற்கை விளைவுகளைக் கூறியதேயன்றி, உழவரால் உளவாகும் செயற்கை விளைவுகளையும் கூறினார், சிறப்புடைய மக்களுலகம் அவற்றால் வாழ்தல் கருதி. ``ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் - வாரி வளங்குன்றிக் கால்`` (குறள் - 14 1) என்றார் திருவள்ளுவரும். இதனானே உழ வாகிய முதற்றொழிலும், ஓரிடத்து விளையும் பொருளைப் பிற விடத்துக்கொண்டு கொடுக்கும் வாணிகம் முதலிய துணைத்தொழிலும் ஆகியவற்றால் பல்வேறு திறத்து மக்களது வாழ்விற்கும் மழை முதலாதல் போந்தது. போதரவே, மேல் கூறாதொழிந்த வணிகர், வேளாளர் என்பாரொடு ஏனைமக்களது ஒழுக்கங்களும் ஓராற்றால் கூறப்பட்டனவாயின. இங்கும் அமுதூறும் மரங்களுடன், நஞ்சூறும் மரங்களும் மழையினால் உளவாதல் கூறினார், ``பார்மிை\\\\u2970?`` எனக் கூறிய இந்நிலவுலகம் நல்வினை தீவினை இரண்டற்கும் இடமாகிய இருவினை உலகமாவதல்லது, சுவர்க்கமும், நரகமும் போல ஒரு வினை உலகமன்று என்பது அறிவித்தற்கு. எனவே, `கன்ம பூமியாகிய இந்நிலவுலகம் நடத்தற்கு மழையே முதல்` என்பது கூறப்பட்டதாம். புல், பூடு முதலிய பலவும் இங்கு, `மரம்` என அடக்கப்பட்டன. ``மரப் பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை`` (தொல்-எழுத்து, 415) என்றாற்போல. ``காஞ்சிரை யும்`` என்ற உம்மை தொகுத்தலாயிற்று.