ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்

பதிகங்கள்

Photo

விட்ட இலக்கணை தான்போம் வியோமத்து
தொட்டு விடாத(து) உபசாந்தத் தேதொகும்
விட்டும் விடாதது மேவும்சத் தாதியில்
சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.

English Meaning:
Jiva State Beyond the Ninth Defies Expression

Jiva reaches the Void, Upasanta and Nadanta
They say,
That is but to speak in grammatical convention triple—
Lakshana Traya*;
When Jiva reaches Void,
Its state is of total renunciation of attributes all,
When Jiva reaches Upasanta
Its state is of renunciation and adherence yet
When Jiva reaches Nadanta
Its state is of renunciation and non-renunciation at once
The State of Jiva, in Finite Manifestness (Svarupa)
Transcends grammatical conventions all.
Tamil Meaning:
ஆன்மாவின் சொரூப (இயற்கை) நிலையைக் குறித்து வரும் சொற்களெல்லாம் இலக்கணைச்சொல்லாகாது இலக்கணச் சொல்லேயாம். அஃதாவது நேர்ப்பொருளைத் தருவனவேயாம். அவை `ஆன்மா நித்தியம், வியாபகம், சித்து` என்றல் போல்வன. ஆன்மாவின் சொரூப நிலையைக் கூறாது, தடத்த (செயற்கை) நிலையைக் குறித்து வரும் சொற்களே இலக்கணைச் சொல்லாய் நிற்கும். அஃதாவது நேரே பொருளை யுணர்த்தாமல், ஒன்றை இடையிட்டுப் பொருளுணர்த்தும். அது மூன்று வகைப்படும். (அவ்வகைகள் மேலே காட்டப்பட்டன.)
`ஆன்மா, மேல், கீழ், நடு உலகங்களில் பிறந்தும், இறந்தும் உழலும்` என்றால், ஆன்மா உண்மையில் வியாபகப் பொருள் ஆகையால், அதற்குப் போக்கு வரவு இல்லையாதலின், ஆன்மாவை விட்டு, `அதன் சூக்கும, பரசரீரங்களே அவ்வாறு உழல்வன` எனக் கொள்கின்றோம். ஆகவே இது விட்ட இலக்கணை.
இனி, `ஆன்மாச் சகலத்திற் கேவலம், சகலம், சுத்தம் என்னும் அவத்தைகளை அடைகின்றது` என்றால், அவ்வவத்தைகளில் உணர்வு வேறுபடுவது ஆன்மாவே ஆகையாலும், அதன் கருவிகளின் கூடுதல் பிரிதல்கள் என்பவற்றாலும், சீவ கரணங்கள் சிவ கரணங்களாய் வேறுபடுதலாலுமே அவத்தைகள் நிகழ்தலாலும் ஆன்மாவை விடாமலே அதன் கருவிகளின் கூடுதல் குறைதல் -களையே கொள்கின்றோம். அதனால் இது விடாத இலக்கணையாம்.
இனி, `ஆன்மா புறத்தே உள்ள ஓசையைக் கேட்கின்றது, உருவத்தைக் காண்கின்றது` என்றால், கேட்டல் காண்டல்களைத் தான் நேரே செய்யாது, செவியும், கண்ணுமாகிய பொறிகளே அவற்றைச் செய்கின்றன என்றும், ஆயினும் அப்பொறிகள் அச்செயல்களைச் செய்யுமாறு ஆன்மா அவற்றை அதிட்டித்து (வாயிலாகப் பற்றி ஏவி) நிற்கின்றது என்றும் கொள்கின்றோம். இதனால், இது விட்டும் விடாத இலக்கணையாம்.
Special Remark:
ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. `சொரூபம் இலக்கணாதீதம்` (இலக்கணைக்கு அப்பாற்பட்டது) எனக் கூறியதனால், `இலக்கணைச் சொற்களாய் வருவன தடத்தத்தைப் பற்றி வருவனவே` என்பது பெறப்பட்டது.
`ஆன்மாவின் தடத்த இயல்புகளைக் கூறுமிடத்து ஆன்மா விற்குச் செயற்கையாயுள்ள மலங்கலின் இயல்பை வேறாகவும், ஆன்மாவின் தற்சொரூபம் வேறாகவும் உணர்தல் வேண்டும்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. ஆகவே, ஆன்மாவைப் போலச் சிவன் தனது தடத்த நிலையில் முன்னை நிலையை மறத்தலாகிய உணர்வு வேறு பாட்டை அடைதல் இல்லாமையால், `அவனது தடத்த நிலைகளைக் குறிக்கவே இலக்கணைச் சொற்கள் பயன்படுகின்றன` எனக்கூறும் மாயாவாதிகள் கூற்றுப் பொருந்தாது என்பதும் இதனாலே குறிக்கப்பட்டதாம். இது வருகின்ற மந்திரத்தில் வெளியாகும்.
வியோமம் - ஆகாயம் ; வானுலகம். அஃது உபலக்கணம். ``உபசாந்தம்`` என்றது கருவிகளின் சேட்டை அடங்கிய நிலையை. சத்தாதி - ஓசை முதலிய புலன்கள். சுட்டும் - நேரே சுட்டுகின்ற.
இதனால், உபநிடதப் பொருள்களைச் செம்மையாக உணர்தற்கு உரிய ஒரு கருவியின் இயல்பு விளக்கப்பட்டது.